மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப கத்திரிக்காய் மோர் குழம்பு செய்யுங்க..

Posted By:

Kathirikai Mor Kulambu Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் காரசாரமாக சமைத்து சாப்பிட பிடிக்காது. அதோடு சொல்லப்போனால் சமையலறையில் நீண்ட நேரம் சமைக்கவும் பிடிக்காது. இந்நிலையில் சட்டென்று சமையலறை முடிக்கும்படியான ரெசிபிக்களையே சமைப்போம். நீங்களும் அப்படியொரு சமையலைத் தான் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

வீட்டில் கத்திரிக்காய் மற்றும் தயிர் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அருமையான சுவையில் கத்திரிக்காய் மோர் குழம்பு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் மோர் குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது காரம் குறைவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

Kathirikai Mor Kulambu How To Make a Brinjal Mor Kuzhambu

உங்களுக்கு கத்திரிக்காய் மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தயிர் - 1/2 லிட்டர்
* உப்பு - 1/2 டீஸ்பூன்

ப்ரை செய்வதற்கு...

* கத்திரிக்காய் - 1/4 கிலோ
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + ப்ரை செய்வதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் கத்திரிக்காயை வட்டத் துண்டுகளாக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கத்திரிக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் கத்திரிக்காயை ப்ரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து, முன்னும் பின்னும் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு மோர் போன்று அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் ப்ரை செய்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கியதும், அதை இறக்கி தயிருடன் சேர்த்து கிளறினால், சுவையான கத்திரிக்காய் மோர் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 14, 2025, 13:32 [IST]
Desktop Bottom Promotion