சாதம், சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்... கத்திரிக்காய் கூட்டு

Posted By:

Kathirikai Kootu Recipe: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சமைக்கும் போது, என்ன சமைப்பது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்பதுண்டு. நீங்களும் இம்மாதிரி குழப்பத்தில் இருப்பீர்களா? இன்று மதியம் எப்படியோ சமையலை முடித்திருப்பீர்கள். ஆனால் இரவு என்ன சமைப்பது என்று இப்போதிருந்தே நீங்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கலாம்.

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Kathirikai Kootu Recipe In Tamil

முக்கியமாக இந்த கத்திரிக்காய் கூட்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் கூட்டு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே கத்திரிக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் - 5
* துவரம் பருப்பு - 100 கிராம்
* பெரிய தக்காளி - 1
* பெரிய வெங்காயம் - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 மூடி
* வரமிளகாய் - 5

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு கத்திரிக்காயை பொடியாக நறுக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், வரமிளகாய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து கத்திரிக்காயைப் போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளறினால், சுவையான கத்திரிக்காய் கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, April 29, 2023, 14:40 [IST]
Desktop Bottom Promotion