இட்லி பொடியை ஒருவாட்டி இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..

Posted By:

Karuppu Ulunthu Idli Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி பொடியை ஸ்டாக் வைத்துக் கொள்வீர்களா? அதுவும் எப்போதும் வீட்டில் தான் இட்லி பொடியை செய்து வைத்துக் கொள்வீர்களா? ஆனால் தற்போது தீர்ந்துவிட்டதா? புதிதாக இட்லி பொடியை அரைக்க வேண்டுமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று இட்லி பொடியை செய்யாமல், ஒருமுறை கருப்பு உளுந்து கொண்டு இட்லி பொடியை செய்யுங்கள்.

இப்படி இட்லி பொடி செய்யும் போது, அந்த இட்லி பொடி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. சொல்லப்போனால் வழக்கமாக செய்யும் இட்லி பொடியை விட இப்படி இட்லி பொடி செய்தால், இதுவரை இட்லி பொடியை விரும்பி சாப்பிடாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி பொடியானது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Karuppu Ulunthu Idli Podi How To Make a Black Urad Dal Idly Podi

உங்களுக்கு கருப்பு உளுந்து இட்லி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உடைத்த கருப்பு உளுந்து - 250 கிராம்
* பொட்டுக்கடலை - 125 கிராம்
* கடலைப் பருப்பு - 125 கிராம்
* சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 15
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நல்ல மணம் வந்து, நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு வறுத்து, அதை மற்றொரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்து இறக்கி, பொட்டுக்கடலையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து, அவற்றையும் நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை கடலைப்பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியின் சூட்டில் வரமிளகாயை போட்டு, 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வறுத்த கடலைப் பருப்பு கலவையை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து, கொரகொரவென்று அரைத்து, ஏற்கனவே அரைத்த பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து, குளிர வைத்து, பின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொண்டால், சுவையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion