மதுரை அழகர் கோவில் கருப்பு உளுந்து தோசை ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... சூப்பர் காலை உணவாக இருக்கும்...!

Posted By:

Karuppu Ulundhu Dosai Recipe in Tamil: தமிழ்நாட்டில் பல முக்கியமான கோவில்கள் உள்ளது, அங்கு பல்வேறு விதமான உணவுகள் பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உணவு நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் உள்ள ஒரு பிரபலமான கோவில்தான் அழகர் கோவில். இங்கு பக்தர்களுக்கு மற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் போல அல்லாமல் கருப்பு உளுந்தால் தயாரிக்கப்படும் தோசை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

கருப்பு உளுந்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபீனால்கள் என பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை அனைத்தும் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. கருப்பு உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வேகவைத்த அரிசி மற்றும் நிறைய நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடர்த்தியான தோசை. நறுமணம் மிக்க, காரமான மற்றும் சுவையான பிரசாதமாக இருக்கும்.

Karuppu Ulundhu Dosai Recipe How to Make Karuppu Ulundhu Dosai

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பு உளுந்து தோசையை சாப்பிட அழகர் கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. சில பொருட்கள் இருந்தால் போதும் அதை நாம் வீட்டிலேயே செய்யலாம்.

உங்களுக்கு ஆரோக்கியமான கருப்பு உளுந்து தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 3 கப் அரிசி
- 1 1/4 கப் தோலுடன் கூடிய முழு கருப்பு உளுந்து
- 1 டேபிள் ஸ்பூன் சுக்கு
- 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் கருப்பு மிளகு
- தேவையான அளவு உப்பு
- 1/2 கப் கறிவேப்பிலை
- தேவையான அளவு நெய்

செய்முறை:

- முதலில் தேவையான பொருட்களை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக தேவையான அளவு தண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைப்பது நல்லது.

- தண்ணீரை வடித்துவிட்டு, தோசை மாவு தயாரிப்பதற்கு,கிரைண்டரில் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, இரண்டையும் தனித்தனியாக அரைக்கவும். பின்னர் இரண்டு மாவுகளையும் ஒன்றாகக் கலக்கவும்.

- இந்த மாவில் பொடித்த சுக்கைச் சேர்க்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து, கொரகொரப்பான தூளாக அரைக்கவும். இந்த மசாலாப் பொடியை மாவில் சேர்க்கவும்.

- பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கறிவேப்பிலையை மாவில் சேர்த்து, கையால் நன்றாகக் கலக்கவும். மாவு புளிக்கத் தேவையில்லை.

- 4-6 மணி நேரம் அப்படியே வைக்கவும். கோவில்களில், காலையில் மாவை அரைத்து, மாலையில் பிரசாதத்திற்காக தோசை தயாரிக்கிறார்கள்.

- தோசை சுடுவதற்கு ஒரு தோசைக்கல்லில் மிதமான தீயில் வைத்து, அதில் நெய் தடவவும். 3 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் தடவவும்

- 2 கப் மாவை ஊற்றி, ஒரு கனமான தோசையாக ஊத்தாப்பம் போல சுடவும். தோசையின் மீது 1 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணெயை சீராக ஊற்றவும். மூடி வைத்து வேகவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

- தோசையின் இருபுறமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். ஒரு தோசை தயாராவதற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகலாம்.

- அவ்வளவுதான் வாசனையான, காரமும், சுவையும் நிறைந்த சத்தான கருப்பு உளுந்து தோசை தயார்.

- சாப்பிடுவதற்கு முன் தோசையின் மீது நெய் தடவிச் சாப்பிடுங்கள். காரமான தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி இதற்கு பக்காவான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, December 14, 2025, 20:56 [IST]
Desktop Bottom Promotion