கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது பாத்து மறக்காம ட்ரை பண்ணுங்க...

Posted By:

Karthigai Deepam Special Appam Recipe: 2024 ஆம் ஆண்டின் கார்த்திகை தீப பண்டிகை டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் வீடுகளை தீபங்களால் அலங்கரித்து, கடவுளுக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். அதில் சிலர் கார்த்திகை பொரி, பணியாரம், அப்பம் போன்றவற்றை செய்வது வழக்கம்.

நீங்கள் இதுவரை கார்த்திகை தீபத்திற்கு என்று ஸ்பெஷலாக எந்த ஒரு பலகாரமும் செய்ததில்லை என்றால், இந்த ஆண்டு அப்பம் செய்யுங்கள். இந்த அப்பம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். முக்கியமாக இது சுவையாக குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Karthigai Deepam Special Recipe How To Make a Soft And Fluffy Appam

உங்களுக்கு கார்த்திகை தீபம் ஸ்பெஷலாக எப்படி அப்பம் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொடித்த வெல்லம் - 3/4 கப்
* வெதுவெதுப்பான பால் - 3/4 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் வெல்லத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெதுவெதுப்பான பாலை 3/4 கப் ஊற்றி, வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, 1/4 கப் அரிசி மாவு, உப்பு 1 சிட்டிகை, ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன், ஆப்ப சோடா 1 சிட்டிகை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல பாலை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை வெல்ல பால் போதவில்லை என்றால், காய்ச்சிய பாலை கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் துருவிய தேங்காயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து, எண்ணெயில் ஒரு இடத்தில் ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் அந்த மாவு தானாவே மேலெழுந்து வரும், அதன் பின் கரண்டியால் அதை திருப்பி போட வேண்டும். இப்படி இந்த அப்பத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், சாப்ட்டான அப்பம் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion