கற்பூரவள்ளி இலைய வெச்சு.. ஒருடைம் இப்படி துவையல் செய்யுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட...

Posted By:

Karpooravalli Thuvaiyal Recipe In Tamil: தினமும் சாதத்துக்கு சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக, அதே சமயம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு சத்தான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கற்பூரவள்ளி செடி இருந்தால், அதன் இலைகளைக் கொண்டு அட்டகாசமான சுவையில் துவையல் செய்து சாப்பிடுங்கள். இந்த கற்பூரவள்ளி துவையலை நல்ல சூடான சாதத்துடன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இதுவரை நீங்கள் எத்தனையோ துவையலை செய்திருப்பீர்கள். ஆனால் இந்த கற்பூரவள்ளி துவையலை நிச்சயம் செய்திருக்கமாட்டீர்கள். இந்த துவையலை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்தால், கசப்பும் தெரியாது, காரமும் தெரியாது. ஆனால் சுவை அருமையாக இருக்கும். இந்த துவையலை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Karpooravalli Thuvaiyal How To Make a Karpooravalli Thuvaiyal Recipe

இந்த துவையலை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால், நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம். இது தவிர கற்பூரவள்ளியானது நெஞ்சு சளியை முறிக்கும், அஜீரண கோளாறு இருந்தால் சரியாகும், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு நல்லது. காய்ச்சலின் போது இந்த கற்பூரவள்ளியைக் கொண்டு துவையல் செய்து உட்கொண்டால், காய்ச்சல் சட்டென்று குறையும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 4 பல்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* கற்பூரவள்ளி இலை - 7-8
* கொத்தமல்லி - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், 1/4 கப் உளுத்தம் பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கற்பூரவள்ளி இலைகளை சேர்தது, அத்துடன் கொத்தமல்லியயும் சேர்த்து, சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்துள்ளதை போட்டு, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான கற்பூரவள்ளி துவையல் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion