இட்லி தோசைக்கு கார சட்னியை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டும்போகாது.. ருசியும் கூட

Posted By:

Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப்போகிறீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னி நீங்கள் வழக்கமாக செய்யும் சட்னியில் இருந்து வேறுபட்டது.

அதோடு இந்த சட்னியை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யும் போது 10 நாட்கள் என்ன, 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம். இந்த சுவையில் கார சட்னியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இந்த சட்னியை செய்ய சொல்வார்கள். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Kara Chutney How To Make a Kara Chutney For Idli Dosa

உங்களுக்கு இந்த கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* விதையுடனான வரமிளகாய் - 10
* விதை நீக்கிய வரமிளகாய் - 10
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* சுடுநீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 20 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் விதையுடனான வரமிளகாய் மற்றும் விதைகளை நீக்கிய வரமிளகாயை காம்புகளை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து, நல்ல சூடான நீரை 1/2 கப் ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது மிளகாய் ஊற வைத்த நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, சட்னியை நன்கு கிளறி விட வேண்டும். சட்னியில் இருந்து நீர் ஓரளவு வற்றி எண்ணெய் பிரிந்து வந்த பின், அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து கிளறி, திறந்து வைத்தவாறு சட்னியை மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சட்னி ஒரு தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால், சுவையான கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 4, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion