கடாய் பன்னீர் கிரேவி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Kadai Paneer Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி பன்னீரை செய்வீர்களா? அதுவும் வீட்டில் சப்பாத்தி செய்தாலே பன்னீரை தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? பன்னீரை எப்போதும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை கடாய் பன்னீர் கிரேவியை செய்யுங்கள்.

பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் பால் பொருட்களிலேயே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியது பன்னீரைத் தான். அத்தகைய பன்னீரை எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல், அவ்வப்போது கடாய் பன்னீர் கிரேவியாக செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கடாய் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடாய் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* தக்காளி - 2
* மல்லி - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் பன்னீரை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மசாலா பொருட்களையும் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

* பின்பு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி!!!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion