மதுரை ஸ்பெஷல் ஒரிஜினல் ஜிகர்தண்டா ரெசிபி... இதை வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்... ட்ரை பண்ணி பாருங்க...!

Posted By:

மதுரை என்றால் அனைவருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது அதன் பிரபல ஜிகர்தண்டாதான். ஜில்லென்ற சுவையான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் இந்த பானம் மதுரை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.

தமிழ்நாடு முழுவதும் ஜிகர்தண்டா பிரபலமானதாக இருந்தாலும் மதுரையில் கிடைப்பதுதான் பாரம்பரிய சுவையுடையது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மதுரை சுவையுடைய ஜிகர்தண்டாவை ருசிக்க நாம் மதுரைக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. கிட்டதட்ட அதன் சுவைக்கு இணையாக இருக்கக்கூடிய ஜிகர்தண்டாவை நாம் வீட்டிலேயே செய்யலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Jigarthanda Recipe How to Make Original Jigarthanda at Home in Tamil

ஜிகர்தண்டாவின் அர்த்தம்

ஜிகர்தண்டாவில் 'ஜிகர்' என்றால் 'இதயம்', 'தண்டா' என்றால் 'குளிர்' எனவே இந்த சிறப்பு பானம் இதயத்திற்கு இனிமையானதாக கருதப்படுகிறது. இது மதுரை சிறப்பு ஜில் ஜில் ஜிகர்தண்டா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஜிகர்தண்டா பால், சர்க்கரை, நன்னாரி சிரப் மற்றும் பாதாம் பிசினை முக்கிய பொருட்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நன்னாரி சிரப் இந்திய சர்சபரில்லா தாவரத்தின் வேர்களிலிருந்து பெறப்படுகிறது, இது இந்த பானத்திற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது.

தேவையான பொருட்கள்:

- பாதாம் பிசின் - 4 முதல் 5
- பால் - 1 கப்
- வெண்ணிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்
- நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
- சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை:

- ஜிகர்தண்டா செய்ய முடிவெடுத்துவிட்டால் அதற்கு முதல் படியாக பாதாம் பிசினை 4-5 மணி நேரம் அல்லது முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
- அது நன்றாகப் பொங்கி வரும். இதை வைத்து 2 கிளாஸ் ஜிகர்தண்டா வரை தயாரிக்கலாம். உங்களுக்கு அதிகம் செய்ய விருப்பமிருந்தால் அதற்கேற்ப அளவை மாற்றிக்கொள்ளவும். இதை ஓரமாக வைத்துவிடவும்.
- நன்கு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து நன்கு கேரமலைஸ் செய்யவும். இதன்மூலம் ஜிகர்தண்டாவுக்கு நல்ல நிறத்தைப் பெறலாம்.
- சர்க்கரையில் தண்ணீர் சேர்க்காமல் தேன் நிறத்திற்கு வரும்வரை நன்கு உருக்கவும். தேன் நிறத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- இப்பொது அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- பாலில் கேரமலைஸ் செய்யப்பட்ட சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறவும்.
- அதன்பின் பால் அளவு 3/4 ஆக குறையும் வரை கொதிக்க வைத்து பின்னர் அடுப்பை அணைத்து விட்டு,
பாலை நன்றாக குளிர வைக்கவும்.
- இப்போது ஜிகர்தண்டா செய்ய அனைத்து பொருட்களும் தயார்.
- இரண்டு டம்ளர்களில் பாதாம் பிசினை பிரித்து அதில் நன்னாரி சிரப் சேர்க்கவும்.
- அதன்பின் நன்கு குளிர்விக்கப்பட்ட பாலை சேர்க்கவும். இதை நன்றாக கலக்கிவிட்டு பின்னர் அதன்மேல் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வைத்து உடனடியாக பரிமாறலாம்.
- கூடுதல் சுவைக்கு முந்திரி, பாதாம், Tutti Frutti போன்றவற்றை அதனுடன் சேர்த்து பரிமாறலாம்.
- இப்போது சுவையான ஒரிஜினல் மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி.

[ of 5 - Users]
Story first published: Friday, October 11, 2024, 15:09 [IST]
Desktop Bottom Promotion