ஐயர் வீட்டு பருப்பு ரசம்

ஐயர் வீட்டு சமையல் என்றால் பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக ஐயர் வீட்டு பருப்பு ரசம் ருசியுடன் இருக்கும். உங்களுக்கு ஐயர் வீட்டு பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:

மதிய வேளையில் சாதம் சாப்பிடும் போது ரசத்தை கட்டாயம் சாப்பிடுவோர் ஏராளம். சொல்லப்போனால், ரசத்திற்கு என்றே தனிப்பிரியர்கள் உண்டு. ஏனெனில் ரசத்தில் அவ்வளவு வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றும் அவ்வளவு அற்புதமான சுவையுடன் இருக்கும். அதோடு ரசம் செரிமானத்திற்கு நல்லது. ஐயர் வீட்டு சமையல் என்றால் பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக ஐயர் வீட்டு பருப்பு ரசம் ருசியுடன் இருக்கும். உங்களுக்கு ஐயர் வீட்டு பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Iyer Veetu Paruppu Rasam Recipe In Tamil

அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயர் வீட்டு பருப்பு ரசத்தின் செய்முறையைப் படித்து முயற்சி செய்யுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு ஏற்றவாறு மிகவும் எளிமையான செய்முறையுடன் இருக்கும். இந்த பருப்பு ரசத்தை நீங்கள் முயற்சித்தால், உங்கள் அனுபவத்தை மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1/4 கப்

* புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

* தக்காளி - 2

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* ரசப் பொடி - 1 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டீஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வரமிளகாய் - 1

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் பருப்பு நன்கு வேகமாக வெந்துவிடும்.

* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இந்த ஊற வைத்துள்ள துவரம் பருப்பை நீருடன் ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* புளியை 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தக்காளியை போட்டு கையால் பிசைந்து விட வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தக்காளி புளிச்சாறு, ரசப் பவுடர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, குறைவான தீயில் புளியின் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். இதற்கு 15-20 நிமிடங்கள் ஆகலாம்.

* அதன்பின் அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு நீர் ஊற்றி, நுரை கட்ட ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். ரசத்தை எக்காரணம் கொண்டும் கொதிக்கவிட்டுவிடக்கூடாது. இல்லாவிட்டால் சுவை நன்றாக இருக்காது.

* பின்பு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்றி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், ஐயர் வீட்டு பருப்பு ரசம் தயார்.

குறிப்பு

ரசம் தயாரிக்கும் போது குறைவான தீயில் தான் அதை சமைக்க வேண்டும். ரசம் தயாரிப்பது ஈஸி தான். ஆனால் பொறுமை மிகவும் அவசியம்.

IMAGE COURTESY

[ of 5 - Users]
Desktop Bottom Promotion