ஐயங்கார் ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்

Posted By:

Iyengar Style Puliyodharai Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை புளியோதரையை முயற்சி செய்து பாருங்கள். புளியோதரை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கோவில் புளியோதரைதான். அதேசுவையில் வீட்டிலேயும் செய்யலாம்.

Iyengar Style Puliyodharai Recipe How to Make at Home in Tamil

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த புளியோதாரையும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அட்டகாசமான புளியோதரை வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் புளியோதரை செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் புளியோதரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் புளியோதரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா பொடி அரைக்க:

- 3 ஸ்பூன் மல்லி விதைகள்
- முக்கால் ஸ்பூன் வெந்தயம்
- 4 வர மிளகாய்
- 3 ஸ்பூன் வெள்ளை எள்
- 1 ஸ்பூன் மிளகு

புளிக்காச்சல் செய்ய:

- 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 வர மிளகாய்
1 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
- 1.5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 கொத்து கறிவேப்பிலை
- 1/2 கப் வேர்க்கடலை
- தேவையான அளவு உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்
- பெரிய எலுமிச்சை அளவு புளி
- 1 கப் அரிசி

செய்முறை:

- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் மசாலா பொடி அரைக்க அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக, லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

- அவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். மசாலாப் பொருட்கள் ஆறியதும், அவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டுப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- பெரிய எலுமிச்சை அளவு புளியை இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளியை நன்றாகப் பிசைந்து சாறு எடுக்கவும். இந்தச் சாற்றை வடிகட்டி, அதிலுள்ள விதைகள் மற்றும் நார் பகுதிகளை நீக்கிவிட்டு தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு சேர்த்து, பொரியும் வரை காத்திருக்கவும். பிறகு வர மிளகாய் மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதனுடன் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.

- அதில் பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- பின்னர் வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும். உப்பு மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும்.

- பாத்திரத்தை மூடி, புளிக் கரைசலை மிதமான தீயில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்க்கவும்.

- இதனை முழுமையாக ஆறவிடவும். பின்னர் ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

- 1 கப் அரிசியை 2 கப் தண்ணீரில் சேர்த்து, குழைந்து போகாமல் சற்று உறுதியான பதத்தில் வேகவைக்கவும்.

- இதை முழுமையாக ஆறவிடவும். அரிசி ஆறியதும், அதனுடன் தயார் செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சலில் பாதியையும், 1/4 டீஸ்பூன் உப்பையும் சேர்க்கவும்.

- சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, அனைத்தும் நன்றாகக் கிளறவும்.

- அவ்வளவுதான் அருமையான ஐயங்கார் ஸ்டைல் புளியோதரை ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, July 13, 2026, 13:15 [IST]
Desktop Bottom Promotion