ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்

Posted By:

Iyengar Style Paruppu Urundai Kuzhambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை பருப்பு உருண்டை குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

Iyengar Style Paruppu Urundai Kuzhambu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- கடலைப்பருப்பு - 1/4 கப்
- துவரம்பருப்பு - 1/4 கப்
- வர மிளகாய் - 2
- கொத்தமல்லி இலை - 2 ஸ்பூன்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

குழம்பு வைக்க:

- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 1
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

- முதலில் புளியை ஊறவைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகள் மற்றும் வர மிளகாயைக் கழுவி, தேவையான தண்ணீரில் 2 முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

- தண்ணீரை வடித்துவிட்டு, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

- இந்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு, கொத்தமல்லி இலைகள் மற்றும் எண்ணெயை சேர்க்கவும்.

- இதை உங்களுக்கு பிடித்த அளவில் உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் 2 கப் புளிச்சாறை எடுத்துக் கொள்ளவும்.

- அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

- நன்கு கொதித்தவுடன் அதில் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை போடவும்.

- உருண்டைகள் வெந்து மேலே மிதந்து வரும் வரை சமைக்கவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

- பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதில் வர மிளகாய் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் இதை குழம்பின் மீது கொட்டி நன்றாக கிளறினால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion