2 இன்ச் இஞ்சி இருந்தா.. இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...

Posted By:

Ginger Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இஞ்சி அதிகமாக உள்ளதா? அப்படியானால் அந்த இஞ்சியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னியை செய்யுங்கள்.

இந்த இஞ்சி சட்னியானது மழைக்காலத்தில் செய்து சாப்பிட ஏற்றது. ஏனெனில் இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மழைக்காலத்தில் அதிகமாக உணவில் சேர்க்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம்.

Ingi Chutney How To Make a Ginger Chutney Recipe

உங்களுக்கு இஞ்சி சனியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இஞ்சி - 2 இன்ச் துண்டு
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி -1 துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறு துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, நீரில் நன்கு கழுவி மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பலை, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கி அதையும் இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான இஞ்சி சட்னி தயார்.

Image Courtesy: Madras Virunthu

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 13, 2024, 6:00 [IST]
Desktop Bottom Promotion