குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் நட்ஸ் பவுடர் - தயாரிப்பது எப்படி?

Posted By:

Nuts Powder For Kids In Tamil: உங்கள் குழந்தையால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா? உங்கள் குழந்தைக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? உங்கள் குழந்தை காய்கறிகள் எதையும் சாப்பிடுவதில்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு அட்டகாசமான மற்றும் சுவையான ரெசிபி குறித்து தான் இப்போது காண போகிறோம். அது வேறொன்றும் இல்லை, நட்ஸ்களை கொண்டு வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை எப்படி தயாரிப்பது என்பது பற்றி தான்.

How To Prepare Nuts Powder For Kids In Tamil

நட்ஸ்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. நட்ஸ்களை வளரும் குழந்தைகள் தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் சில குழந்தைகள் நட்ஸ்களை சாப்பிட மறுப்பார்கள். அத்தகையவர்களுக்கு நட்ஸ்களை பொடி செய்து, அவற்றை பாலில் கலந்து கொடுத்தால், நிச்சயம் விரும்பி குடிப்பார்கள்.

முக்கியமாக இந்த நட்ஸ் பவுடர் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும். கீழே குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் நட்ஸ் பவுடரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, எப்படி இருந்தது என்பதை எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாதாம் - 1 கப்
* முந்திரி - 1/2 கப்
* வால்நட்ஸ் - 1/4 கப்
* பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்
* பூசணி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
* குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் பாதாமை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து அதை பொன்னிறமாக வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வால்நட்ஸை சேர்த்து அதையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பிஸ்தா மற்றும் பூசணி விதைகளை சேர்த்து, அவற்றையும் பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி, அவற்றையும் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த நட்ஸ்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் 3 ஏலக்காய் மற்றும் 1/4 டீஸ்பூன் குங்குமப்பூ சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த பவுடரை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடரை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
* இந்த நட்ஸ் பவுடரை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் சூடான பாலில் போட்டு கலந்தால், சுவையான மற்றும் சத்தான நட்ஸ் புரோட்டீன் பால் தயார்.

Image Courtesy: mylittlemoppet

[ of 5 - Users]
Story first published: Friday, July 14, 2023, 16:15 [IST]
Desktop Bottom Promotion