மதியம் டக்கு-ன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த பட்டாணி புதினா சாதத்தை செய்யுங்க..

Posted By:

Pattani Pudina Rice Recipe In Tamil: மதிய வேளையில் சமைக்க பிடிக்கவில்லையா? அதற்காக சமைக்காமல் இருக்க முடியாது. ஆனால் டக்கென்று ஒரு சமையலை செய்யலாம். அதுவும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்யாமல், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் பட்டாணியும், புதினாவும் இருந்தால் போதும், சுவையான ஒரு கலவை சாதத்தை செய்யலாம். அது தான் பட்டாணி புதினா சாதம். இந்த சாதம் செய்தால் சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. வெங்காய பச்சடி மட்டுமே போதும். முக்கியமாக இந்த சாதத்தை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

Green Peas Mint Rice How To Make a Pattani Pudina Rice Recipe

உங்களுக்கு பட்டாணி புதினா சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி புதினா சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* புதினா - 1/2 கட்டு
* கொத்தமல்லி - கைப்பிடி
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் -2
* முந்திரி - 10
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 100 கிராம்
* பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* அரிசி - 2 கப்
* சுடுநீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் அரிசியை நீரில் கழுவி, பின் அதில் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து வறுத்து, வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி மற்றும் பட்டாணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள புதினா விழுதை சேர்த்து கிளறி, பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலாவை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பச்சை வாசனை போனதும், அதில் ஊற வைத்துள்ள அரிசியில் இருந்த நீரை வடிகட்டிவிட்டு, அரிசியை சேர்த்து கிளறி, 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் நீர் என 2 கப் அரிசிக்கு 5 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, லேசாக கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான பட்டாணி புதினா சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 7, 2024, 13:00 [IST]
Desktop Bottom Promotion