இஞ்சியை வெச்சு இதுவரை சட்னி செஞ்சிருக்கீங்களா? இல்லன்னா இன்னிக்கு ட்ரை பண்ணுங்க..

Posted By:

Ginger Chutney Recipe In Tamil: தினமும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் இஞ்சி உள்ளதா? அப்படியானால் இஞ்சி சட்னியை செய்யுங்கள்.

என்னது, இஞ்சியைக் கொண்டு சட்னி செய்யலாமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இஞ்சியைக் கொண்டு சட்னி செய்யலாம். இந்த இஞ்சி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Ginger Chutney Recipe

உங்களுக்கு இஞ்சி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இஞ்சி - 1/2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* காஷ்மீரி வர மிளகாய் - 10
* பூண்டு - 4 பல் (நறுக்கியது)
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் புளியை சுடுநீரில் 10-15 நிமிடம் ஊற வைத்து, பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து குறைவான தீயில் வைத்து, 2-3 நிமிடம் வதக்கி, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, அனைத்தையும் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அனைத்து பொருட்களையும் மிக்சர் ஜாரில் போட்டு, புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், இஞ்சி சட்னி தயார்.

குறிப்பு:

* இந்த சட்னி 2 நாட்கள் வரை அறைவெப்பநிலையில் நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
* இந்த சட்னிக்கு அளவாக தண்ணீர் ஊற்றுங்கள். இல்லாவிட்டால் சட்னி மிகவும் நீராகிவிடும்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Saturday, December 23, 2023, 7:43 [IST]
Desktop Bottom Promotion