இனிமே சப்பாத்திக்கு மாவை இப்படி பிசைங்க.. சப்பாத்தி உப்பியும் வரும்.. சாப்ட்டாவும் இருக்கும்..

Posted By:

Fluffy Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? நீங்கள் எப்போது சப்பாத்தி சுட்டாலும் அது வரட்டி போன்று தான் இருக்குமா? என்ன செய்தாலும் நீங்கள் செய்யும் சப்பாத்தி மென்மையாகவே இருக்காதா? அப்படியானால் அடுத்தமுறை சப்பாத்தி சுடும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சுடுங்கள்.

இப்படி சப்பாத்திக்கு மாவு பிசைந்து சப்பாத்தியை சுடும் போது, சப்பாத்தி நன்கு உப்பு வருவதோடு, நீண்ட நேரம் மென்மையாகவும் இருக்கும். முக்கியமாக மென்மையாக சப்பாத்தி சுடும் போது, வழக்கமாக 2 சாப்பிடுபவர்கள், கூடுதலாக 2 வாங்கி சாப்பிடுவார்கள்.

Fluffy Chapati How To Make a Fluffy Chapati Recipe

உங்களுக்கு நல்ல மென்மையான சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி உப்பி வர எப்படி பிசைய வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - சப்பாத்தி சுட தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை பிசையும் போது விரல்களால் அழுத்தி பிசையாமல் உள்ளங்கையால் நன்கு அழுத்தி பிசையுங்கள். இப்படி பிசையும் போது மாவு மென்மையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவை பிசைந்த பின் ஊற வைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உடனே கூட சப்பாத்தியை சுடலாம். சப்பாத்தி நன்கு உப்பி வரவேண்டுமானால், அதற்கு மாவை உருட்டும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
* அதற்கு சப்பாத்தி மாவை சிறிது எடுத்து கைகளால் நன்கு உருட்டி, பின் சப்பாத்தி கட்டையில் சிறிது கோதுமை மாவை தூவி, உருட்டிய மாவை வைத்து முதலில் லேசாக தேய்க்க வேண்டும்.
* பின்பு அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி அப்படியே கைகளால் தடவி விட வேண்டும். பின் அதை முக்கோண வடிவில் மடித்துக் கொள்ள வேண்டும்.
* அப்படி மடித்த பின் சப்பாத்தி போன்று தேய்க்கும் போது சப்பாத்தி நன்கு உப்பி வரும். இதேப் போல் அனைத்து மாவையும் உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், உயர் தீயில் வைத்து, திருப்பி திருப்பி போட்டு சப்பாத்தியை சுட வேண்டும். குறைவான தீயில் வைத்து சப்பாத்தி சுட்டால், சப்பாத்தி வரட்டி போன்று மாறிவிடும். எனவே உயர் தீயில் வைத்து சப்பாத்தியை சுடுங்கள். இப்படி செய்தால் சப்பாத்தி நன்கு உப்பி வரும் மற்றும் நீண்ட நேரம் சாப்ட்டாகவும் இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Friday, June 7, 2024, 20:30 [IST]
Desktop Bottom Promotion