இளநீரை வைச்சு இந்த மாதிரி ரசம் செஞ்சு பாருங்க... உங்கள் ஆரோக்கிய பிரச்சினை எல்லாம் காணாம போயிரும்...!

Posted By:

Elaneer Rasam Recipe In Tamil: ரசம் என்பது நமது தமிழ் பாரம்பரியத்தில் இன்றியமையாத ஒன்று. எல்லா விருந்து நிகழ்ச்சிகளிலும் இது முக்கிய இடத்தை பிடிக்கும். அதிகமாக சாப்பிட்டு விட்டால் ரசம் சாப்பிட வேண்டும், வயிற்று செரிமான பிரச்சனைக்கு தீர்வு ரசம், காய்ச்சல் சளிக்கு அன்றைய மருந்தாக இருந்ததே ரசம் தான்.

ரசத்தில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல வகைகள் உள்ளன, பருப்பு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம், செலவு ரசம், மற்றும் மருந்து ரசம் என நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் நாம் இங்கு பார்க்க போவது இளநீர் ரசம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க!

Elaneer Rasam Recipe How to Prepare Elaneer Rasam

தேவையான பொருட்கள்:

- தக்காளி - 1 (மீடியம் சைஸ்)
- இளநீர் (தண்ணீர்) - 1 கப்
- இளநீர் (வழுக்கை) - 3 ஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- மஞ்சள்தூள் - ¼ டீ ஸ்பூன்
- ரசப் பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- புதினா இலைகள் - சிறிதளவு

செய்முறை:

- இளநீரில் இருக்கும் தண்ணீரை நீக்கி தனியாக வைக்கவும்.

- இளநீரை இரண்டாக உடைத்து உள்ளே இருக்கும் தேங்காய் பகுதியை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

- கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சுத்தமாக மண் இல்லாமல் நீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, புளி மற்றும் எடுத்து வைத்த தேங்காய் பகுதியில் இருந்து 2 ஸ்பூன் சேர்க்கவும். மீதம் இருப்பவற்றை பிறகு பயன்படுத்தி கொள்ளலாம்.

- ரசம் வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்த தக்காளி, புளி, மற்றும் தேங்காய் கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

- இந்த கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ரசப் பொடி சேர்த்து நன்கு கலக்கி நுரை வரும் வரை காத்திருக்கவும்.

- பின் இளநீர் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு நிமிடத்திற்கு மேல் கொதிக்க விட வேண்டாம்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொடியை விடவும். கடுகு பொரியும் சத்தம் அடங்கியதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

- அதில் கருவேப்பிலை இலைகளை சேர்க்கவும். கடைசியாக பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

- இந்த கலவையை ரசத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

- பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகள், புதினா, மற்றும் மீதம் இருக்கும் தேங்காய் பகுதியை சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான இளநீர் ரசம் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, April 6, 2025, 17:58 [IST]
Desktop Bottom Promotion