சப்பாத்திக்கு முட்டை குருமாவை ஒருடைம் இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...

Posted By:

Egg Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையைக் கொண்டு குழம்பு, கிரேவி, குருமா என்று செய்வீர்களா? அதுவும் சப்பாத்திக்கு முட்டை குருமாவை செய்வீர்களானால், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் குருமா செய்யுங்கள். இதனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

இந்த குருமாவின் ஸ்பெஷலே, இதற்கு பிரத்யேகமாக அரைக்கும் மசாலா தான். உங்கள் குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இப்படி முட்டை குருமா செய்து கொடுங்கள். இதனால் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முட்டை குருமா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Egg Kurma How To Make a Egg Kurma Recipe

உங்களுக்கு முட்டை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 3
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 2 கப்
* குழம்பு மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

ப்ரை செய்வதற்கு...

* வேக வைத்த முட்டை - 5
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/4 மூடி
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கியதை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, 2 கப் நீரை ஊற்றி, குழம்பு மிளகாய் தூளை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்கு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள முட்டையை சேர்த்து ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கொதித்துக் கொண்டிருக்கும் குருமாவில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ப்ரை செய்து வைத்துள்ள முட்டையை அப்படியே எண்ணெயுடன் குருமாவில் சேர்த்து கிளறி ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான முட்டை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 10, 2025, 22:17 [IST]
Desktop Bottom Promotion