1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..

Posted By:

Diwail Special Ghee Mysore Pak Recipe: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா?

பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில் வருவது மைசூர் பாக்காகவே இருக்கும். அதுவும் வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை சாப்பிடவே அனைவரும் விரும்புவோம்.

Diwail Special Ghee Mysore Pak Recipe

உங்கள் வீட்டில் உள்ளோர் மைசூர் பாக்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பலகாரம் செய்யும் போது, மைசூர் பாக்கையும் செய்யுங்கள். மைசூர் பாக் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும்.

உங்களுக்கு வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் மைசூர் பாக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 கப்
* எண்ணெய் - 3/4 கப்
* நெய் - 3/4 கப்
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை கடலை மாவில் ஊற்றி கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், குறைவான தீயில் வைத்து, சர்க்கரை கம்பி பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.
* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.
* கடலை மாவை வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர் பாக் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 8, 2023, 14:34 [IST]
Desktop Bottom Promotion