1 மூடி தேங்காய் வெச்சு ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு குடுங்க.. உங்க குழந்தைங்க உடனே காலி பண்ணிடுவாங்க...

Posted By:

Coconut Milk Cupcake Recipe In Tamil: கோடை விடுமுறைகள் குழந்தைகள் வீட்டில் இருப்பதால், நிச்சயம் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதுவும் மாலை வேளை வந்துவிட்டாலே, சமையலறையைத் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு தான் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸை கொடுக்க முடியும்.

வீட்டு செலவை குறைக்க நினைத்தால், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், வீட்டில் தேங்காய் இருந்தால், அதைக் கொண்டு கப்கேக் செய்து கொடுங்கள். இந்த கப்கேக் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Coconut Milk Cupcake How To Make a Coconut Milk Cupcake Recipe

உங்களுக்கு தேங்காய் பால் கப்கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் கப்கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 2 கப்
* வெல்லம் - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 3/4 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5 (துண்டுகளாக்கப்பட்டது)
* உலர் திராட்சை - 10
* உப்பு - 2 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை 1 கப் எடுத்து, அதில் 2 ஏலக்காய் சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காயை வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் வெல்லத்தை எடுத்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி, வெல்லம் கரையும் வரை தேங்காய் பாலை சூடேற்றினால் போதும். கொதிக்க விட வேண்டாம். இல்லாவிட்டால் தேங்காய் பால் திரிந்துவிடும்.
* தேங்காய் பால் சூடாகி, வெல்லம் கரைந்த பின் அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் பால் நன்கு குளிர்ந்ததும், அதை வடிகட்டி மாவில் ஊற்றி நன்கு கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து இறக்கி, அதில் பாதியை மாவுடன் சேர்த்து மீதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவில் உப்பு மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து சிறு சிறு கிண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கிண்ணங்களில் எண்ணெய் தடவி, பின் தயாரித்து வைத்துள்ள மாவை பாதி அளவில் ஊற்ற வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு சூடானதும், இட்லி தட்டை உள்ளே வைத்து, அதன் மேல் அந்த கிண்ணங்களை வைத்து, மேலே எடுத்து வைத்துள்ள மீதமுள்ள முந்திரி உலர் திராட்சையை தூவி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பின் கத்தியைக் கொண்டு கிண்ணத்தில் உள்ள கேக்கின் முனைகளை கீறிவிட்டு எடுத்தால், சுவையான தேங்காய் பால் கப்கேக் தயார்.

Image Courtesy: kurinji. com

[ of 5 - Users]
Story first published: Monday, May 13, 2024, 16:54 [IST]
Desktop Bottom Promotion