சத்தான.. பிரண்டை சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..

Posted By:

Pirandai Chutney Recipe In Tamil: இதுவரை இட்லி, தோசைக்கு எத்தனையோ சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் வாரம் ஒருமுறையாவது பிரண்டை சட்னியை செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த பிரண்டை சட்னி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.

குறிப்பாக மூட்டு வலி, வாத நோய் கொண்டவர்கள் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு மிகவும் ருசியாகவும் இருக்கும். பிரண்டை சட்னியை ஒருமுறை சுவைத்தால், அடிக்கடி செய்து சாப்பிட தோன்றும். ஏனெனில் அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

Chutney Recipes How To Make a Pirandai Chutney

உங்களுக்கு பிரண்டை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரண்டை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரண்டை - 2 கட்டு
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - நெல்லிக்காய் அளவு
* தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பிரண்டையின் கூர்மையான 4 முனைகளையும் கத்தியால் நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து ப்ரை செய்து, தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, அதையும் மிளகாயுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் கூடுதலாக 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, துண்டுகளாக்கி வைத்துள்ள பிரண்டையை சேர்த்து, அதோடு கறிவேப்பிலையும் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய மற்ற வெங்காயம், பூண்டு, பிரண்டையையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பிரண்டை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 27, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion