இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு

Posted By:

Chidambaram Kathrikai Gothsu: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு கொத்சு செய்யுங்கள்.

அதுவும் சிதம்பரம் ஸ்டைலில் கத்தரிக்காய் கொத்சு செய்து கொடுங்கள். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Chidambaram Kathrikai Gothsu Recipe In Tamil

உங்களுக்கு சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் - 10
* புளி - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து பொடி செய்வதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் கத்திரிக்காயைக் கழுவி, அதை நீளத் துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். புளியை நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதை அடுப்பில் வைத்து, வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய் துண்டுகளப் போட்டு மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மல்லி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதே மிக்சர் ஜாரில் வேக வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்துள்ள புளியை கரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, 2 கப் நீர், சுவைக்கேற்ப உப்பு, புளிச்சாறு மற்றும் அரைத்த கத்திரிக்காயை சேர்த்த கிளறி, 4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, கொத்சு சற்று கெட்டியானதும், மேலே சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு தயார்.

Image Courtesy: rakskitchen

[ of 5 - Users]
Story first published: Saturday, July 1, 2023, 14:57 [IST]
Desktop Bottom Promotion