செட்டிநாடு ரங்கூன் புட்டு ரெசிபி... வழக்கமான இனிப்புகளை செய்யாம இந்த ஈஸியான ஸ்வீட்டை செஞ்சு அசத்துங்க...!

Posted By:

Chettinad Rangoon Puttu Recipe in Tamil: செட்டிநாடு உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. ஏனெனில் மற்ற பிராந்திய உணவுகளைக் காட்டிலும் செட்டிநாடு உணவுகளுக்கென தனி சுவை உள்ளது. அதனால்தான் பெரும்பாலான ஹோட்டல்களில் செட்டிநாடு உணவுகள் என்று குறிப்பிடப்படுகிறது. செட்டிநாடு உணவுகள் எவ்வளவு சுவையானவதோ அதேயளவிற்கு மிகவும் வித்தியாசமானதும் கூட.

இனிப்புகள் என்றாலே பொதுவாக அனைவருக்கும் நினைவிற்கு வருவது லட்டு, ஜிலேபி போன்றவைதான். ஆனால் வெகுசிலருக்கு கிராமத்து இனிப்புகளான சுழியம், புட்டு போன்றவை நினைவிற்கு வரும். புட்டு என்றாலே நமக்கு முதலில் கேரளாதான் நினைவிற்கு வரும். ஆனால் செட்டிநாடு ரங்கூன் புட்டு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Chettinad Rangoon Puttu Recipe How to Prepare Chettinad Rangoon Puttu

கிட்டதட்ட ரவா கேசரி போல காட்சியளிக்கும் இந்த ரங்கூன் புட்டு செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும், அதேசமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். மேலும் இதில் ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. இந்த பதிவில் சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- ரவை - 1 கப்
- வெல்லம் - 3/4 கப்
- வேகவைத்த பாசிப்பருப்பு - 1 கப்
- நெய் - 3 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - அரை கப்
- முந்திரி - 10
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
- காய்ச்சிய பால் - 1 கப்

செய்முறை:

- ஒரு உறுதியான கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி தயாராக வைக்கவும்.
- பின்னர் முந்திரி வறுத்த அதே நெய்யில் ரவையை சிறிது நேரம் நன்றாக வாசனை வரும் வரை வறுத்து பின் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
- அதன்பின் வேகவைத்த பருப்பை அந்த தண்ணீருடன் ரவையில் கொட்டி கிளறவும்.
- பின்னர் அதில் பாலை சேர்த்து கட்டிகள் வராதபடி நன்கு கிளறவும்.
- பால் முழுவதும் ரவையால் உறிஞ்சப்படும் வரை நன்கு கிளறவும்.
- பின்னர் வெல்லப்பாகை சேர்த்து ரவையை நன்கு கிளறவும்.
- அடுப்பை அணைத்தவுடன் அதில் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.
இறுதியாக வறுத்த முந்திரியை அதில் சேர்த்து கிளறினால் சூப்பரான செட்டிநாடு ரங்கூன் புட்டு ரெடி!

பின்குறிப்பு:

- ரவையை நன்கு வறுக்கவும், இல்லையெனில் புட்டு கூழ் போல மாறிவிடும்.
- இந்த புட்டுக்கு இனிப்பு மிதமான அளவில் இருப்பது நல்லது, எனவே அதற்கேற்றாற் போல வெல்லம் சேர்த்து கொள்ளவும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 26, 2024, 21:14 [IST]
Desktop Bottom Promotion