செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Chettinad Podi Kathirikai Varuval Recipe In Tamil: மதியம் வீட்டில் சாம்பாருக்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? நீங்கள் ஒரு சுவையான சைவ செட்டிநாடு சைடு டிஷ் செய்ய ஆசைப்படுகிறீர்களா?

Chettinad Podi Kathirikai Varuval

உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, காரசாரமாக ருசியாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன கத்திரிக்காய் - 8
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

பொடி மசாலாவிற்கு...

* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* எள் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 7
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/4 கப்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் கத்திரிக்காயை நீரில் கழுவி, மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல், பாதியாக வெட்டிவிட்டு, பின் பூமொட்டு விரிவது போன்று 4-6 ஆக கீறிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை கத்திரிக்காயின் உள்ளே தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

* பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள பொடி மசாலாவைத் தூவி கிளறி, சற்று மொறுமொறுவென்று வந்த பின், அதனை இறக்கினால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion