பாலக் கீரையை ஒருவாட்டி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்யுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்...

Posted By:

Chettinad Palak Keerai Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் யாரும் கீரை சாப்பிடமாட்டார்களா? அவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாலக் கீரையை வாங்கி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்யுங்கள்.

இந்த செட்டிநாடு பாலக்கீரை கூட்டு செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். அதுவும் இந்த கீரை கூட்டு சூடான சாதத்துக்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த கூட்டு குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Chettinad Palak Keerai Kootu How To Make a Palak Keerai Kootu Recipe

உங்களுக்கு செட்டிநாடு பாலக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பாலக்கீரை கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 75 கிராம்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* தண்ணீர் - தேவையான அளவு

கூட்டு செய்வதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பாலக்கீரை - 1 கட்டு
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் பாலக்கீரையை எடுத்து, நீரில் கழுவிவிட்டு, பின் அதன் இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த பாசிப்பருப்பை நீருடன் ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், பூண்டு பற்களை சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கெள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு பாலக்கீரை கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 17, 2024, 13:23 [IST]
Desktop Bottom Promotion