சளி, இருமல் புடிச்சிருந்தா ஒருடைம் இந்த நண்டு குழம்பு செஞ்சு சாப்பிடுங்க... டக்குன்னு சரியாகும்...

Posted By:

Chettinad Nandu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி நண்டு செய்வீர்களா? அப்படி செய்தாலும் எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? சற்று காரசாரமாக சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் செட்டிநாடு நண்டு குழம்பு செய்யுங்கள். இந்த நண்டு குழம்பை சளி, இருமல் பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், சட்டென்று சரியாகும். முக்கியமாக இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Chettinad Nandu Kuzhambu How To Make a Chettinad Nandu Kuzhambu Recipe

உங்களுக்கு செட்டிநாடு நண்டு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

குழம்பிற்கு...

* நண்டு - 3/4 கிலோ
* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் நண்டு வாங்கி அதை சுத்தம் செய்து, நீரில் நன்கு கழுவிவிட்டு, பின் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கிளறி, நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறி மென்மையாகும் வரை வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்ாயம், சீரகம் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை அரைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள நண்டு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அதில் குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து ஒருமுறை கிளறி, பின் மூடி வைத்து, தீயைக் குறைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நண்டு குழம்பு தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Thursday, August 29, 2024, 13:41 [IST]
Desktop Bottom Promotion