தோசைக்கு இந்த செட்டிநாடு ஸ்டைல் ஸ்பெஷல் கார சட்னி செஞ்சு பாருங்க... எவ்வளவு தோசை சுட்டாலும் காணாமப் போயிரும்!

Posted By:

Chettinad Kara Chutney Recipe in Tamil: நம் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் விதவிதமாய் வித்தியாசமாய் உணவு வகைகளும் பலகாரங்களும் இருக்கின்றன. ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு சென்றால் அவர்களின் பேச்சு வழக்கோடு பாரம்பரிய உணவு வகைகளும் மாறுபடும். ஒவ்வொரு உணவின் பெயர் மாறுவதோடு அவற்றின் சுவையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அந்த வரிசையில் செட்டிநாடு உணவுகளுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது மக்களிடம். கடைகளின் பெயரில் கூட செட்டிநாட்டு உணவகம் என்று குறிப்பிடும் அளவிற்கான தனிச்சிறப்பு அது. செட்டிநாடு உணவுகளில் சட்னி வகைகளுக்கு தனியிடம் உண்டு. குறிப்பாக செட்டிநாடு கார சட்னி அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். இந்த சுவையான செட்டிநாடு கார சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Chettinad Kara Chutney Recipe How to Prepare Chettinad Kara Chutney

தேவையான பொருட்கள்:

- தக்காளி - 2
- வரமிளகாய் - 10
- பெரிய வெங்காயம் - 1(சிறியது)
- புளி - சிறிதளவு (1 பெரிய நெல்லிக்காய் அளவு)
- பூண்டு - 12 பல்
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும். அதன் மேற்பரப்பில் கருப்பாக பூஞ்சை படலம் இருப்பின் அதை சுத்தமாக தண்ணீரில் கழுவி விடவும்.

- பின் அவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- நீங்கள் சின்ன வெங்காயம் சேர்க்க விரும்பினால் 5 அல்லது 6 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து கொள்ளலாம்.

- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியின் மேற்பகுதியை நீக்கி விடவும். அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.

- வரமிளகாயின் காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

- புளியை லேசாக தண்ணீரில் அலசி ஓடு அல்லது நார் போன்ற பகுதி இருந்தால் நீக்கி உலர வைக்கவும்.

- ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கும் மிக்ஸி ஜாரில் வரமிளகாயை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

- அதனுடன் தோல் உரித்து வைத்த பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும்.

- பின் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் புளியை சேர்க்கவும்.

- கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

- இந்த சட்னிக்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதுமானதாக இருக்கும்.

- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.

- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- அதனுடன் அரைத்து வைத்த சட்னி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு கார சட்னி தயார்.

- இது இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 24, 2025, 13:59 [IST]
Desktop Bottom Promotion