சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்... செட்டிநாடு சௌசொள மசாலா கூட்டு

Posted By:

உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌசௌ உள்ளதா? அப்படியானால் அந்த சௌசௌ காயை கொண்டு ஒரு சுவையான செட்டிநாடு சௌசௌ மசாலா கூட்டு செய்யுங்கள்.

இந்த கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களானால், இந்த ரெசிபியை நீங்கள் செய்து கொடுக்கலாம்.

Chettinad Chow Chow Masala Kootu Recipe In Tamil

உங்களுக்கு செட்டிநாடு சௌசௌ மசாலா கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சௌசொள மசாலா கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சௌசௌ - 1 (பெரியது, தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)

மசாலாவிற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* பட்டை - 1 சிறிய துண்டு
* சோம்பு - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் துண்டுகளாக்கப்பட்ட சௌசௌ காயை 2 கப் நீரில் போட்டு வேக வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் மிளகுத் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள சௌசௌவை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு சௌசௌ மசாலா கூட்டு தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 11, 2023, 19:40 [IST]
Desktop Bottom Promotion