சப்பாத்திக்கு சுண்டலை வைச்சு இந்த செட்டிநாடு ஸ்டைல் கிரேவி செய்யுங்க... மட்டன் குருமா மாதிரியே இருக்கும்...!

Posted By:

Chettinad Chana Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் இரவு உணவாக இருப்பது சப்பாத்திதான். சப்பாத்தி செய்வதற்கு எளிதானதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதும் கூட. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி உள்ளது.

சப்பாத்தி ஆரோக்கியமானது மட்டுமல்ல சரியான சைடிஷுடன் சாப்பிடும்போது சுவையானதும் கூட. சப்பாத்திக்கு ஆஸ்தான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. எனவே சப்பாத்திக்கு வேறு சைடிஷ் செய்வதே உங்களின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்யும். உருளைக்கிழங்கு மசாலா போரடிக்கும் போது இந்த செட்டிநாடு ஸ்டைல் சுண்டல் மசாலாவை ட்ரை பண்ணி பாருங்க.

Chettinad Chana Masala Recipe How to Make Chettinad Chana Masala

செட்டிநாடு உணவுகள் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏனெனில் செட்டிநாடு உணவுகளின் சுவையும், அவற்றை தயாரிக்கும் முறையும் மிகவும் தனித்துவமானது. செட்டிநாடு ஸ்டைலில் சுண்டலை சமைக்கும் போது அது ஆரோக்கியமானதாக இருப்பதுடன் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் சுண்டல் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சுண்டல் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சுண்டல் வேகவைக்க:

- 1 கப் கொண்டைக்கடலை
- 3 கப் தண்ணீர்
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் உப்பு
- 1/4 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கிராம்பு
- சிறிய துண்டு இலவங்கப்பட்டை

வறுத்து அரைக்க:

- 1/2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கிராம்பு
- சிறிய துண்டு இலவங்கப்பட்டை
- 1/4 கப் தேங்காய்
- 1 ஸ்பூன் மிளகு
- 4 பூண்டு
- 1 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 துண்டு இஞ்சி
- 1/2 ஸ்பூன் கசகசா
- 1 ஸ்பூன் தனியா
- 6 சிறிய வெங்காயம்
- 1/4 கப் தண்ணீர்

குழம்பு வைக்க:

- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் சோம்பு
-- 2 கிராம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 20 சின்ன வெங்காயம்
- 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி

செய்முறை:

- முதல் நாள் இரவே சுண்டலை ஊற வைக்கவும்.

- காலையில் தண்ணீரை வடித்து ஒரு குக்கரில் ஊற வைத்த சுண்டல், மிளகு, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, தேவையான அளவு தண்ணீர், எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 6 விசில் வரவும் வரை வேக வைக்கவும்.

- மசாலா அரைக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கிராம்பு, இலவங்கப்பட்டை, சோம்பு, மிளகு, சீரகம், தனியா மற்றும் கசகசாவை சேர்த்து வறுக்கவும்.

- பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பூண்டு நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

- இறுதியாக தேங்காயை கொட்டி நன்கு கிளறி ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கிராம்பு, இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

- தக்காளி குழையும் வரை மூடி போட்டு வேக விடவும்.

- தக்காளி நன்றாக வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.

- தேவையான அளவு தண்ணீர் மற்றும் வேகவைத்த சுண்டலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

- பின்னர் விசில் போட்டு 3 விசில் வரும் வேக வைக்கவும்.

- விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லியை தூவி இறக்கினால் சூப்பரான செட்டிநாடு சன்னா மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, February 16, 2026, 20:50 [IST]
Desktop Bottom Promotion