சப்பாத்திக்கு சுண்டல் வைச்சு இந்த மாதிரி ஒரு குருமா செய்யுங்க... மட்டன் குருமாவை விட சூப்பரா இருக்கும்...!

Posted By:

Chana Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் இரவு உணவாக இருப்பது சப்பாத்திதான். சப்பாத்தி செய்வதற்கு எளிதானதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதும் கூட. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி உள்ளது.

சப்பாத்தி ஆரோக்கியமானது மட்டுமல்ல சரியான சைடிஷுடன் சாப்பிடும்போது சுவையானதும் கூட. சப்பாத்திக்கு ஆஸ்தான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. எனவே சப்பாத்திக்கு வேறு சைடிஷ் செய்வதே உங்களின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்யும்.

Chana Masala Recipe How to Prepare Sundal Kurma

ஆரோக்கியமான சைடிஷ் என்று வரும்போது கொண்டைக்கடலையை வைத்து செய்வது நல்ல தேர்வாக இருக்கும். கொண்டைக்கடலையை வைத்து அசைவ குருமா ஸ்டைலில் சப்பாத்திக்கு எப்படி குருமா செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- ¾ கப் கருப்பு சுண்டல்
- 2 நறுக்கிய வெங்காயம்
- 2 நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் மல்லித்தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ எலுமிச்சை
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு

மசாலா அரைக்க:

- ½ கப் தேங்காய் துருவல்
- 8 முந்திரி பருப்பு
- ¾ ஸ்பூன் சோம்பு
- ½ அங்குல இஞ்சி
- 3 பச்சை மிளகாய்

தாளிக்க:

- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

- கருப்பு சுண்டலை இரவே ஊறவைக்கவும். டின்னருக்கு செய்வதாக இருந்தால் காலையில் அதை ஊற வைக்கவும்.

- சுண்டல் நன்கு ஊறியவுடன் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

- மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- அதன்பின் நறுக்கிய பூண்டு சேர்த்து வாசனை வரும்வரை தாளிக்கவும்.

- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.

- அதன்பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் வேகவைத்த சுண்டலை தண்ணீருடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

- பின்னர் அரைத்த விழுதை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

- 5 நிமிடம் குருமா நன்கு கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப்பரான கொண்டைக்கடலை கிரேவி ரெடி.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 27, 2025, 20:27 [IST]
Desktop Bottom Promotion