சப்பாத்திக்கு காலிஃப்ளவர் வெச்சு இப்படி குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Cauliflower Kurma Recipe In Tamil: சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவர் கொண்டு குருமா செய்யுங்கள். அதுவும் இந்த குருமாவிற்கு தனியாக ஒரு மசாலாவை வறுத்து பொடி செய்து சேர்ப்பதால், நீங்கள் வழக்கமாக செய்யும் குருமாவை விட மிகவும் பிரமாதமாக இருக்கும்.

முக்கியமாக ஒருமுறை இந்த ஸ்டைலில் குருமாவை செய்தால், பின் அடிக்கடி இப்படி தான் குருமா செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த குருமாவின் சுவை அசைவ குருமாவின் சுவையையே தோற்கடிக்கும் வகையில் இருக்கும்.

Cauliflower Kurma How To Make a Cauliflower Kurma For Chapati

உங்களுக்கு காலிஃப்ளவர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* முந்திரி - 12
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 3
* பட்டை - சிறிய துண்டு

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* காலிஃப்ளவர் - 1
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முந்திரியை சேர்த்து லேசாக நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பின் பொடித்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு வேக வைக் வேண்டும்.
* அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து, மசாலா அனைத்தும் காலிஃப்ளவரில் ஒன்று சேரும்படி கிளறி விட வேண்டும்.
* பிறகு குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமா நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, February 10, 2025, 21:11 [IST]
Desktop Bottom Promotion