ஆந்திரா ஸ்பெஷல் கத்திரிக்காய் பிரியாணி ரெசிபி... செஞ்சு பாருங்க...மட்டன் பிரியாணி மாதிரியே சூப்பரா இருக்கும்..

Posted By:

Brinjal Biryani Recipe in Tamil: மனிதர்கள் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமானது. பெரும்பாலான உணவுகள் பசிக்காக இருந்தாலும், சில உணவுகள் ருசிக்காக விரும்பி சாப்பிடுவதாக இருக்கும். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான உணவுதான் பிரியாணி. பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு ஆத்மார்த்தமான உணர்வு.

பொதுவாக பிரியாணி என்றாலே அது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். சைவ உணவு உண்பவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி மற்றும் காளான் பிரியாணி. இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரியாணி மக்களுடன் பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டுள்ளது.

Brinjal Biryani Recipe How to Prepare Brinjal Biryani

சிக்கன், மட்டனைப் போலவே ஒரு சில காய்கறிகளை வைத்தும் பிரியாணி செய்யலாம். அந்த வகையில் ஆந்திராவில் கத்திரிக்காயை வைத்து ஒரு காரசாரமான சுவையான பிரியாணி செய்வார்கள். உங்கள் வீட்டில் சிக்கன், காளான் என எதுவுமில்லை என்றால் கத்திரிக்காயை வைத்து பிரியாணி செய்து எல்லோரையும் அசத்தலாம். இந்த பதிவில் காரசாரமான கத்திரிக்காய் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள் :

- பாஸ்மதி அரிசி - 2 கப்
- நீள கத்திரிக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - 4
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 3
- தயிர் - அரை கப்
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- பட்டை - 1 துண்டு
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 3
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- வறுத்த முந்திரி - 10
- வறுத்த வேர்க்கடலை - 1 ஸ்பூன்

செய்முறை :

- பாஸ்மதி அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு நன்கு வதக்கவும்.

- பிறகு நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும்.

- கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்க்கவும்.

- மசாலா பச்சை வாசனை போனதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர் ஊற்றி வதக்கி கொதிக்க விடவும், பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.

- பின்னர் 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

- சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து வறுத்த முந்திரி மற்றும்வ வறுத்த வேர்க்கடலை போட்டு சாதம் உடையாமல் கிளறினால் சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 20, 2025, 21:45 [IST]
Desktop Bottom Promotion