மழை நேரத்தில் பிரட் இருந்தால் ஈவ்னிங் இப்படி வடை சுட்டு சாப்பிடுங்க.. மொறுமொறுன்னு அருமையா இருக்கும்...

Posted By:

Bread Methu Vadai Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுவும் மாலை வேளையில் தான் மழை அதிகம் பெய்கிறது. அப்படிப்பட்ட மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?

அதுவும் மழை நேரத்தில் வடை தான் சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால் வழக்கமாக செய்யும் வடையை விட சற்று வித்தியாசமான வடை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வடை செய்து சாப்பிடுங்கள். இந்த பிரட் மெதுவடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Bread Methu Vadai How To Make a Bread Methu Vadai Recipe

உங்களுக்கு பிரட் மெதுவடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் மெதுவடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரட் - 8 துண்டு
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ரவை - 50 கிராம்
* அரிசி மாவு - 125 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
* சமையல் சோடா - 1 சிட்டிகை
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, ரவை, அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சமையல் சோடாவை சேர்த்து, மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து, மெதுவடை போன்று தட்டி நடுவே ஓட்டை போட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் வடையாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பிரட் மெதுவடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 15, 2024, 17:35 [IST]
Desktop Bottom Promotion