செஃப் அருணா விஜய்யின் போண்டா மோர் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Bonda Mor Kuzhambu Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த கோடையில் உடலை குளுகுளுவென்று இதமாக வைத்துக் கொள்ளும் வகையில் தயிர் கொண்டு மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். அதுவும் வெறும் மோர் குழம்பு செய்யாமல், போண்டா மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த போண்டா மோர் குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.

Bonda Mor Kuzhambu How To Make Bonda Mor Kuzhambu Recipe By Chef Aruna Vijay

இந்த போண்டா மோர் குழம்பு ரெசிபி குறித்து செஃப் அருணா விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த போண்டா மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே போண்டா மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 2-3
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கையளவு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன் (30 நிமிடம் ஊற வைத்தது)
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் (30 நிமிடம் ஊற வைத்தது)
* பச்சரிசி - 1 டீஸ்பூன் (30 நிமிடம் ஊற வைத்தது)

போண்டாவிற்கு...

* உளுத்தம் பருப்பு - 1 கப் (1 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 1/4 முதல் 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மோர் குழம்பிற்கு..

* கெட்டித் தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் "அரைப்பதற்கு" கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கெட்டி தயிர், 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி, கொதிக்க விடாமல் சூடேற்றி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கைகளால் நன்கு அடித்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து கலந்தால், போண்டா மாவு தயார்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் குட்டி குட்டி போண்டாக்களாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பொரித்த போண்டாக்களை சூடாக இருக்கும் போதே, மோர் குழம்புடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக குழம்பை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கலந்தால், சுவையான போண்டா மோர் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, May 15, 2026, 13:53 [IST]
Desktop Bottom Promotion