1/2 கப் கடலை மாவு இருந்தா.. இந்த சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..

Posted By:

Bombay Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்னும் எந்த சட்னியும் உங்கள் நினைவிற்கு வரவில்லையா? அப்படியானால் இன்று பாம்பே சட்னியை செய்யுங்கள். இந்த பாம்பே சட்னி செய்வதற்கு 1/2 கப் கடலை மாவு இருந்தால் போதும், சட்டென்று செய்துவிடலாம்.

முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த சட்னியை பேச்சுலர்களும் செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் இந்த மாதிரியான சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், சமையலை சட்டென்று முடிக்கலாம்.

Bombay Chutney How To Make a Bombay Chutney Recipe

உங்களுக்கு பாம்பே சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப் + 2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* இஞ்சி - 1 துண்டு (துருவியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்மல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் கடலை மாவை எடுத்து, அதில் முதலில் 1 கப் நீரை ஊற்றி, கட்டிகளின்றி மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மீண்டும் 2 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி, பூண்டு, பெருங்காயத் தூள் சேர்த்து 10 நொடிகள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் கலந்து வைத்துள்ள கடலை மாவு நீரை ஊற்றி கிளறி, மேலே கறிவேப்பிலையைத் தூவி, மூடி வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, June 9, 2025, 7:59 [IST]
Desktop Bottom Promotion