எப்பவும் இட்லி, தோசை செய்யாம.. ஒரு டைம் பார்லி கஞ்சி செஞ்சு குடிங்க.. தொப்பை மடமடன்னு குறையும்..

Posted By:

Barley Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? இட்லி தோசை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் பார்லி கஞ்சியை செய்து காலை உணவாக உட்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நல்ல சுவையான பார்லி கஞ்சி செய்யத் தெரியாதா? கவலை வேண்டாம். உங்களுக்காக பார்லி கஞ்சியை எப்படி சத்தான காய்கறிகளை அதிகம் சேர்த்து நல்ல சுவையுடன் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த பார்லி கஞ்சியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீர் போன்றவை வெளியேறி, உடல் பிட்டாக இருக்கும்.

Barley Kanji How To Make a Barley Kanji Recipe

உங்களுக்கு பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* பார்லி அரிசி - 1/2 கப்
* பச்சை பயறு - 1/2 கப்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்

கஞ்சிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பார்லி அரிசியை சேர்த்து 2-3 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே குக்கரில் பச்சை பயறை சேர்த்து பொன்னிறமாக மாறி, நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பார்லி அரிசியை சேர்த்து, அத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து, ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த பச்சை பயறை நீரில் 2 முறை கழுவிவிட்டு பின் போட்டு, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி, அத்துடன் அரைத்த பார்லி அரிசி பொடியை சேர்த்து கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கொதிக்கத் தொடங்கும் போது, ஒருமுறை நன்கு கிளறி விட்டு, பின் குக்கரை மூடி உயர் தீயில் வைத்து 1 விசிலும், குறைவான தீயில் வைத்து 3 விசிலும் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக் வேண்டும்.
* பின் குக்கரைத் திறந்து, கரண்டியால் அதை நன்கு கிளறி விட வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், 1 கப் வெதுவெதுப்பான நீரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மூடி வைத்துள்ள காய்கறிகளைத் திறந்து, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பார்லி அரிசியை சேர்த்து, கஞ்சிக்கு எவ்வளவு நீர் வேண்டுமோ, அவ்வளவு நீரை ஊற்றி நன்கு 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பார்லி கஞ்சி தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Friday, April 12, 2024, 7:39 [IST]
Desktop Bottom Promotion