பக்ரீத் ஸ்பெஷல்: ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணி

Posted By:

Ambur Mutton Biryani: இன்று பக்ரீத் பண்டிகை என்பதால், இஸ்லாமியர்களின் வீடுகள் நன்கு கமகமவென்று இருக்கும். ஏனெனில் இன்று அனைத்து இஸ்லாமியர்களின் வீடுகளிலும் மட்டன் பிரியாணி செய்வார்கள். சொல்லப்போனால் பக்ரீத் என்றதுமே பிரியாணி தான் பலரது நினைவிற்கும் வரும்.

பிரியாணியிலேயே இஸ்லாமியர்கள் செய்யும் பிரியாணி எப்போதுமே அட்டகாசமான சுவையில் இருக்கும். இஸ்லாமியர்கள் செய்யும் ஸ்டைலில் தான் மிகவும் பிரபலமான ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணி இருக்கும்.

Bakrid Special: Ambur Mutton Biryani Recipe In Tamil

நீங்கள் உங்கள் வீட்டில் ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணியை செய்ய விரும்புகிறீர்களா? கீழே ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 500 கிராம்
* சீரக சம்பா அரிசி - 500 கிராம்
* எண்ணெய் - 1/2 கப்
* பூண்டு பேஸ்ட் - 50 கிராம்
* இஞ்சி பேஸ்ட் - 50 கிராம்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 8 (பேஸ்ட் போல் அரைத்தது)
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பட்டை - 5 துண்டு
* கொத்தமல்லி - 1/2 கப்
* புதினா - 1/2 கப்
* தயிர் - 1/4 கப்
* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். அதே சமயம் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்கக வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் பேஸ்ட், மட்டன், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், தக்காளி, மீதமுள்ள தயிர், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட்டு, கொதிக்க வைக்க வேண்டும். பின் குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 10-12 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி வேக தேவையான அளவு நீரை ஊற்றி, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியை கழுவிப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரிசி பாதியாக வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு, குக்கரில் உள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, 15 நிமிடம் பிரியாணியை வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கிளறிவிட்டு இறக்கினால், சுவையான ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணி தயார்.

Image Courtesy: yummyoyummy

[ of 5 - Users]
Story first published: Thursday, June 29, 2023, 13:25 [IST]
Desktop Bottom Promotion