1 கப் அவல், 2 வெங்காயம் இருந்தா டக்குனு இந்த மசாலா உருண்டையை செய்யுங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!

Posted By:

Aval Masala Urundai Recipe in Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? ஸ்நாக்ஸ் செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் 1 கப் அவல் இருந்தால் போதும் அட்டகாசமான சுவையில் மசாலா உருண்டை செய்து கொடுங்கள். இந்த அவல் மசாலா உருண்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும்.

உங்கள் வீட்டில் 1 கப் அவலும் சில எளிய மசாலா பொருட்களும் இருந்தால் போதும் மிகவும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான மசாலா உருண்டையை செய்யலாம். இந்த அவல் மசாலா உருண்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மாலை நேரத்தில் சாப்பிட காரசாரமாக இருக்கும்.

Aval Masala Urundai Recipe How to Make Aval Masala Urundai

உங்களுக்கு அவல் மசாலா உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் மசாலா உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அவல் - 1 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 1/2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- கருவேப்பிலை - 2 கொத்து
- இஞ்சி - சிறிய துண்டு
- வெங்காயம் - 2
- சீரகம் - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

- முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அவலை சேர்த்து சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவி கொள்ளுங்கள்.

- பிறகு அவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து நாம் ஊற வைத்திருக்கும், அவலில் பாதி அளவை மட்டும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- அரைத்த இந்த அவலை முழு அவலுடன் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.

- பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் கடுகு, 1 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து இவற்றை சேர்க்க வேண்டும்.

- கடலைப்பருப்பும், உளுந்தும் சிவந்த பிறகு இதில் பெருங்காயம், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து வெங்காயம் நன்றாக வேகும் அளவிற்கு வதக்க வேண்டும்.

- வெங்காயம் நன்றாக வெந்த பிறகு இவை அனைத்தையும் நாம் பிணைந்து வைத்திருக்கும் அவலில் சேர்த்து நன்றாக கலந்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

- இப்பொழுது அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் நாம் உருட்டி வைத்திருக்கும் அவல் உருண்டைகளை எடுத்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இந்த அவல் உருண்டைகளை தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரை ஸ்பூன் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு தக்காளியை நைசாக அரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

- பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

- பச்சை வாசனை போன பிறகு நாம் வேகவைத்து எடுத்திருக்கும் அவல் உருண்டைகளை இதனுடன் சேர்த்து அந்த உருண்டைகளில் மசாலா அனைத்தும் சேர்வது போல் பிரட்டி விட்டு கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்கினால் சுவையான அவல் மசாலா உருண்டை ரெடி.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 24, 2025, 17:45 [IST]
Desktop Bottom Promotion