இப்படி ரசம் வெச்சா.. குழம்பு கூட தேவைப்படாது.. அவ்வளவு ருசியா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க...

Posted By:

Arachuvitta Rasam Recipe In Tamil: மதிய வேளையில் உங்களுக்கு சமைக்க பிடிக்கவில்லையா? தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அதற்காக சமைக்காமல் இருக்க முடியாது தான். ஆனால் சிம்பிளாக டக்கென்று ஒரு சமையலை செய்ய நினைத்தால், அரைச்சுவிட்ட ரசத்தை செய்யுங்கள்.

இந்த அரைச்சுவிட்ட ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இதை செய்தால் எந்த ஒரு குழம்பும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூட்டு, பொரியல் செய்தால் போதும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Arachuvitta Rasam How To Make a Arachuvitta Rasam Recipe

உங்களுக்கு அரைச்சுவிட்ட ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - 2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு....

* நெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து 2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை நீரில் 2 முறை கழுவிவிட்டு, அதில் நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, ஊற வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், தக்காளியை சேர்த்து, அத்துடன் உப்பு சிறிது சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* புளிச்சாறு நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து 2 கப் நீரை ஊற்றி கலந்து, நுரை கட்டி ஒரு கொதி வந்ததும், அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, அத்துடன் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, வரமிளகாயையும் சேர்த்து வதக்கி, ரசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான அரைச்சுவிட்ட ரசம் தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Monday, August 5, 2024, 13:45 [IST]
Desktop Bottom Promotion