ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Andhra Mess Style Kovakkai Thuvayal Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாதத்துக்கு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் இருக்குமாறான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் துவையலை செய்யுங்கள். அதுவும் கோவைக்காயைக் கொண்டு துவையல் செய்யும் போது சுவை பிரமாதமாகவும் இருக்கும், சத்தானதும் கூட. முக்கியமாக இந்த கோவைக்காய் துவையல் ஆந்திராவில் உள்ள மெஸ்ஸில் மிகவும் பிரபலமானது. இந்த ஸ்டைல் துவையலை செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அள்ளும்.

Andhra Mess Style Kovakkai Thuvayal How To Make Ivy Gourd Thuvaiyal Recipe

உங்களுக்கு ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுப்பதற்கு...

* எள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 7 (கீறியது)
* கோவைக்காய் - 150 கிராம் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து அதையும் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் புளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் ப்ளேவருக்கு சிறிது கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த எள்ளு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அத்துடன் சீரகம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்து கலந்தால், சுவையான கோவைக்காய் துவையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, June 15, 2026, 14:30 [IST]
Desktop Bottom Promotion