ஒருடைம் ஆட்டு ஈரல் வாங்கி இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதத்துக்கு சும்மா அல்டிமேட்டா இருக்கும்...

Posted By:

Goat Lungs Gravy Recipe In Tamil: வார விடுமுறை நாட்களில் தான் நம்மால் வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்து, அதை பொறுமையாக சுவைத்து சாப்பிட முடியும். அதுவும் இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?

அப்படியானால் ஆட்டு ஈரலை வாங்கி கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த ஆட்டு ஈரல் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Aatu Eral Gravy How to Make a Goat Lungs Gravy Recipe

உங்களுக்கு ஆட்டு ஈரல் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு ஈரல் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஆட்டு நுரையீரல் - 1 (சுத்தம் செய்தது)
* கடலை பருப்பு - 1 கையளவு (1 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புதினா - 1 கையளவு
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

தேங்காய் மசாலாவிற்கு...

* தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஆட்டு நுரையீரலின் மேல் உள்ள மெல்லிய லேயரை நீக்கிவிட்டு, நீரில் நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவி வைத்துள்ள நுரையீரலை சேர்த்து, அத்துடன் ஊற வைத்த கடலைப் பருப்பு, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, ஈரல் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புதினா இலைகளை சேர்த்து கிளறி, குழம்பு மிளகாய் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள ஈரலை அப்படியே சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய் பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த தேங்காய் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியுடன் சேர்த்து கிளறி, குக்கரை மூடி மீண்டும் 2 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆட்டு ஈரல் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, April 6, 2025, 13:05 [IST]
Desktop Bottom Promotion