ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்?

Posted By:

Aadi Velli Special Chettinad Paal Kozhukattai Recipe In Tamil: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மிகவும் புனிதமான மாதமாகும். இம்மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் திருமணமான பெண்கள் குடும்ப நலனுக்காக அம்மனுக்கு விரதமிருந்து பூஜைகளை செய்து, பிரசாதங்களை தயாரித்து படைத்து வழிபாடு செய்வார்கள். அப்படி அம்மனுக்கு பிரசாதங்களை செய்யும் போது பாயாசம், பொங்கல், கும்மாயம், ஆடிப்பால் என்று தான் பலரும் செய்வார்கள். ஆனால் ஒருமுறை செட்டிநாடு பால் கொழுக்கட்டையை செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுங்கள். இந்த கொழுக்கட்டை ருசியானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

Aadi Velli Special Recipe How To Make Chettinad Paal Kozhukattai Recipe

உங்களுக்கு இந்த செட்டிநாடு பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பால் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கொழுக்கட்டை/இடியாப்ப மாவு - 1 3/4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு

தேங்காய் பாலுக்கு..

* துருவிய தேங்காய் - 2 கப்
* ஏலக்காய் - 3
* வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு

வெல்ல நீருக்கு...

* பொடித்த வெல்லம் - 1 1/4 கப்
* தண்ணீர் - 1/4 கப்

கொழுக்கட்டைக்கு...

* தண்ணீர் - 4 கப்
* உருட்டிய கொழுக்கட்டை
* வெல்ல நீர்
* தேங்காய் பால்
* துருவிய தேங்காய்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 5 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதித்ததும் இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை/இடியாப்ப மாவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறி விட்டு, கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை உருண்டையாகவோ, குச்சியாகவோ என விருப்பமான வடிவத்தில் உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை எடுத்து, ஏலக்காய் சேர்த்து, முதலில் ஒரு 3/4 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் அந்த சக்கையை ஜாரில் போட்டு, மீண்டும் ஒரு 1/2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அரைத்து, வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது தேங்காய் பால் தயார்.
* பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டையை சேர்த்து, உடனே கிளறி விடாமல், 3-4 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 4 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, ஒருமுறை லேசாக கிளறி விட வேண்டும்.
* பின் மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியை திறந்தால், கொழுக்கட்டை நன்கு வெந்திருக்கும். பின் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, சூடானதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சிறிது தூவி கிளறினால், சுவையான செட்டிநாடு பால் கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 17, 2026, 14:45 [IST]
Desktop Bottom Promotion