ஆடி வெள்ளி ஸ்பெஷல் பேரிச்சம் பழம் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Aadi Velli Special Pericham Pazham Payasam Recipe In Tamil: ஆடி வெள்ளி நாட்களில் வீட்டில் நன்கு வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். அதுவும் இந்நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்ய கட்டாயம் பாயாசத்தை செய்வார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? எப்போதும் ஒரே மாதிரியான பாயாசத்தை தான் செய்வீர்களா?

இன்று சற்று வித்தியாசமான ஏதாவது ஒரு பாயாசத்தை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பேரிச்சம் பழம் உள்ளதா? அப்படியானால் அந்த பேரிச்சம் பழத்தைக் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த பாயாசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Aadi Velli Special Recipe How To Make a Pericham Pazham Dates Payasam

உங்கள் பிள்ளைகள் பேரிச்சம் பழத்தை சாப்பிட மறுத்து வந்தால், அவர்களுக்கு இப்படி பேரிச்சம் பழ பாயாசத்தை செய்து கொடுங்கள். இதனால் நிச்சயம் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மாலை வேளையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வரும் பிள்ளைக்கு இந்த பாயாசத்தை செய்து கொடுத்தால், அவர்களின் வயிறும் நிரம்பும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு இந்த ஆடி வெள்ளிக்கு பேரிச்சம் பழ பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேரிச்சம் பழ பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காய்ச்சிய பால் - 1/2 லிட்டர்
* பேரிச்சம் பழம் - 10
* சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 10

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் விதைகளை நீக்கிய 10 பேரிச்சம் பழத்தை எடுத்து, காய்ச்சிய பாலை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, ஒரு பாத்திரத்தில் பாயாசத்திற்கு காய்ச்சிய 1/2 லிட்டர் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.
* பால் நன்கு சூடாவதற்குள், மிக்சர் ஜாரில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை பாலோடு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை கொதிக்கும் பாலுடன் சேர்த்து, அத்துடன் சுக்கு பவுடர், ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்கு கிளறி, 1 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டும். அரைத்த பேரிச்சம் பழத்தை சேர்த்த பின் அதிகம் கொதிக்க விடாதீர்கள். இல்லாவிட்டால் பால் திரிந்துவிடும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து இறக்கி, அதை பாயாசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான பேரிச்சம் பழம் பாயாசம் தயார். விருப்பமிருந்தால், இறுதியாக மேலே பாதாம், பிஸ்தா போன்றவற்றை துருவி தூவி விடலாம்.

குறிப்பு: பேரிச்சம் பழத்தில் ஏற்கனவே இனிப்பு இருப்பதால், பேரிச்சம் பழ பாயாசத்தில் இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பேரிச்சம் பழத்தில் உள்ள இனிப்புச்சுவையே போதுமானதாக இருக்கும். இருப்பினும், உங்களுக்கு இனிப்பு தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 1, 2025, 13:06 [IST]
Desktop Bottom Promotion