ஆடி பூரம் ஸ்பெஷல் அக்காரவடிசல் - சிம்பிளா குக்கரில் எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Aadi Pooram Special Srirangam Akkaravadisal Recipe In Tamil: ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாள் மிகவும் விசேஷமானது. இந்நாளில் அம்மனுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் தான் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். இந்த விஷேச நாளில் அம்மனுக்கு பல்வேறு பிரசாதங்கள் செய்து படைத்து மக்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

அப்படி ஆடி பூரம் நாளில் அம்மனுக்கு படைக்கும் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு தான் அக்காரவடிசல். இது ஸ்ரீரங்கத்தில் மிகவும் பிரபலமானது. இந்த ஸ்ரீரங்கம் அக்காரவடிசல் மிகவும் சுவையானது, நாவில் வைத்ததும் கரையக்கூடியது.

Aadi Pooram Special Recipe How To Make a Srirangam Special Akkaravadisal

நீங்கள் ஆடி பூரம் நாளில் வீட்டில் அம்மனுக்கு ஸ்பெஷலான ஸ்வீட் செய்து படைத்து வழிபட நினைத்தால், அக்காரவடிசலை செய்து படையுங்கள். இந்த அக்காரவடிசல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த அக்காரவடிசலை மிகவும் சுலபமாக குக்கரிலேயே செய்யலாம்.

உங்களுக்கு ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அக்காரவடிசல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/4 கப்
* பச்சரிசி - 1 கப்
* நெய் - 1 கப்
* முந்திரி - 10-15
* உலர் திராட்சை - 15-20
* பொடித்த வெல்லம் - 3 கப்
* தண்ணீர் - 1 கப்
* சூடான பால் - 5 கப் + 3 கப்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* முட்கரண்டி - 1
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் அரிசியை சேர்த்து, அரிசி சூடாகும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய்யை ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக மாறத் தொடங்கியதும், அதில் உலர் திராட்சையை சேர்த்து ப்ரை செய்து, அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் 3 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, வெல்லம் கரைந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் குக்கரில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, அதில் 5 கப் சூடான பாலை ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து, குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு கொதி வர வைக்க வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு, அதனுள் ஒரு முட்கரண்டியை சாய்வாக வைக்க வேண்டும். இப்படி கரண்டியை வைப்பதால், அதில் உள்ள பால் பொங்காமல் இருக்கும்.
* பின்பு குக்கரை மூடி, 7-8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள கரண்டியை எடுத்துவிட்டு, ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும்.
* அடுத்து அதில் மீதமுள்ள 3 கப் சூடான பாலை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, நன்கு கிளறி, சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பச்சை கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து, ப்ரை செய்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் மீதமுள்ள அனைத்து நெய்யையும் ஊற்றி கிளறினால், சுவையான ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, July 28, 2025, 17:05 [IST]
Desktop Bottom Promotion