ஆடிப்பூர ஸ்பெஷல் பாசிப்பயறு பாயாசம்... ஈஸியா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Aadi Poora Special Pasipayaru Payasam Recipe in Tamil: ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தின நாளாகும். இந்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் அம்பிகை அவதரித்ததாக கருதப்படுகிறது. இது சைவம் மற்றும் வைணவ என இரண்டு கோவில்களிலும் பாகுபாடின்றி கொண்டப்படும் ஒரு திருநாள். இந்த நாளில் அம்பிகைக்கு அர்ச்சனை, ஆர்த்தனைகள், மற்றும் பூஜைகள் மற்றும் இன்றி கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பும் நடத்தப்படுகிறது. இந்த நாளில் அம்பிகையை மனதில் நினைத்து வேண்டி கொண்டு அவர்களால் முடிந்த விரதம் எடுத்தால் அம்பிகையின் அனுக்கிரகத்தை பெறலாம்.

மேலும் இது குழந்தைக்காக வேண்டுபவர்கள், திருமண தடை நிவர்த்தி, மற்றும் வாழ்வில் முன்னேற்றத்தை வேண்டுபவர்கள் என அனைவருக்கும் வேண்டியது கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த அற்புதமான நாளான ஆடிப்பூரம் நாளை(27.07.2025) திங்கள் கிழமை வருகிறது. இந்த நாளில் எளிமையாக அம்பிகைக்கு பிரியமான இனிப்பு வகைகளில் ஒன்றான பாசிப்பயறு பாயசம் செய்து வழிபடுங்க. சரி வாங்க எப்படி சட்டுனு பாசிப்பருப்பு பாயசம் செய்வது என பார்க்கலாம்.

Aadi Poora Special Recipe How to Make Pasipayaru Payasam

தேவையான பொருட்கள்:

- பாசிப்பயறு (பச்சை பயறு) - 1 கப்
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1 ½ கப் (சுவைக்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- தேங்காய் - 1 மூடி
- பால் - ½ கப்
- முந்திரி - 5
- திராட்சை - 8
- குங்குமப்பூ - 2
- உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

- முதலில் பாசிப்பயறை வாணலியில் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.

- அதை நன்றாக தண்ணீரில் அலசி விட்டு குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

- அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் அல்லது அதற்கு மேல் விசில் விட்டு நன்றாக வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.

- பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.

- தேங்காயை துருவி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தனியே எடுத்து கொள்ளவும்.

- ஏலக்காய் மற்றும் மீதம் இருக்கும் தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.

- சிறு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து காயவிடவும்.

- பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து விட்டு, அதே நெய்யில் உலர்திராட்சையை சேர்த்து பலூன் போல் பெரிதானதும் எடுத்து ஆறவிடவும்.

- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கரைந்ததும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். (பிசுபிசுப்பாக இருந்தால் போதும், கம்பி பதம் தேவையில்லை)

- பின் அதை மண் மற்றும் தூசி இல்லாமல் வடித்து சுத்தம் செய்து வேக வைத்து ஆற வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

- அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் பால், காய்ச்சி ஆற வைத்த பால், தனியாக எடுத்து வைத்த தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

- கடைசியாக நெயில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கிளறி இறக்கினால் பாசிப்பயறு பாயசம் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, July 27, 2025, 20:17 [IST]
Desktop Bottom Promotion