கர்ப்ப காலத்தில் வேலைக்கு போறீங்களா? கவனம் தேவை!

By Mayura Akilan

Working Women
கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் எழுந்து வீட்டு வேலைகள் செய்வதே சிரமமாக இருக்கும். இதில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் என்றால் கூடுதல் சுமைதான். வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. கர்ப்பகாலத்தில் வீட்டில் மட்டுமல்லாது வேலைக்கு செல்லும் இடங்களிலும் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

மாடிப்படி ஏறாதீங்க

அலுவலகத்தில் தரைத்தளம் என்றால் சிக்கல் இல்லை. அதுவே மாடிப்படி ஏறி செல்லவேண்டிய இடங்களில் கவனம் தேவை. லிப்ட் இருந்தால் கூடுமானவரை லிப்ட் உபயோகியுங்கள். மாடிப்படி ஏறினால் கருவில் உள்ள குழந்தைக்கு அழுத்தம் அதிகமாகும். தரைகளில் டைல்ஸ் என்றால் அதிக கவனத்துடன் மெதுவாக நடங்கள். அவசரப்பட்டு நடந்து பின்னர் வழுக்கி விழுந்தால் சிக்கல்தான்.

சத்துணவை மறக்காதீங்க

வேலை பிஸியில் அவ்வப்போது சாப்பிட மறக்காதீங்க. ஏனெனில் வயிற்றில் இருக்கும் கருவுக்கு அவ்வப்போது ஏதாவது தீனி கொடுத்தே ஆகவேண்டும். எனவே அலுவலக மேல் அதிகாரிகளிடம் இதற்கென ஸ்பெசல் பெர்மிசன் பெற்றுக்கொள்ளுங்கள். வேலை நேரத்தில் சின்ன சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டு சத்தான பழங்கள், காய்கறி சாலட்களை சாப்பிடலாம் ஜூஸ் பருகலாம். இது பணியின் சோர்வை போக்குவதோடு குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்குமான சரிவிகித அளவில் சத்துக்களை கிடைக்கச் செய்யும்.

காபி, சிகரெட்டிற்கு தடை

கர்ப்ப காலத்தில் கருவின் நலனை கருத்தில் கொண்டு காபி பருகுவதை தடை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் காஃபின் கரு குழந்தைக்கு ஆகாது. அதேபோல் சிகரெட்டில் உள்ள நிகோடின் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு குறைபிரசவம் கூட ஏற்படும். எனவே பணிச் சுமையை குறைக்க காபி, சிகரெட் குடிப்பதை தவிர்த்து ஆரோக்ய பானங்களை பருகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சரியாக அமருங்கள்

சாதாரண சமயங்களில் இருப்பதைப் போல இல்லாமல் அதிகம் அழுத்தம் தராத சேரில் அமர்ந்து வேலை பார்க்கலாம். வயிற்றில் குழந்தை இருப்பதால் ஒரே இடத்தில் அமந்து கொண்டே இருந்தாலும் பாதிப்புதான். முதுகுவலி ஏற்படும். இதனை தவிர்க்க அவ்வப்போது எழுந்து சின்னதாய் ஒரு வாக் போகலாம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் சுறுசுறுப்பாக உணரலாம்.

பணியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவகாலம் வரை கண்டிப்பாக பணிக்கு சென்றே ஆகவேண்டிய சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதனால் எளிதான, ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Story first published: Monday, August 27, 2012, 15:51 [IST]
Desktop Bottom Promotion