மசக்கையும் மயக்கமும் சில நாளுக்குத்தான்

By Mayura Akilan

Morning sickness
காலை எழுந்தவுடனே வயிற்றை புரட்டும், தலையை லேசாக சுற்றும். இது ஒரு இன்ப அவஸ்தை. நம்முள் ஒரு உயிர் கருவாகி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போதே இந்த அவஸ்தைகள் எல்லாம் வந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடும். கர்ப்ப காலத்தில் இது போன்ற அறிகுறிகள்தான் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடல் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதை மசக்கை என்றும் பேச்சுவழக்கில் தெரிவிக்கின்றனர்.

கருவானது கருப்பையில் தங்கி வளர ஆரம் பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. எதைப்பார்த்தாலும் வயிற்றை பிரட்டிக்கொண்டு வரும். அதுவரை நாசிக்கு இதமான வாசனையாக இருந்தவை எல்லாம் ஒத்துக்கொள்ளாதவையாகிவிடும்.

மசக்கை காலத்தில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வரும் என்பதால் பெரும்பாலான கர்ப்பிணிகள் உண்பதை தவிர்த்துவிடுவர். இது தவறு இவ்வாறு வயிற்றை காயப்போடுவது குழந்தைக்கு ஆபத்தாகிவிடும். எனவே

வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும். அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

புளியும் மாங்காயும் இனிக்கும்

மசக்கை காலத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். 'எதற்கும் அடங்க மாட்டேன்" என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.

சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும்.

மசக்கை நல்லதே

இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு. வாந்தியாவது ஒன்றாவது என்று அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு குழந்தையை கருவிலேயே ஆரோக்கியமாக வளர்க்கும் கர்ப்பிணிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் மசக்கை வாந்தி ஏற்படுவது தாய்க்கும் கருக்குழந்தைக்கும் ஏற்றது அது ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Story first published: Friday, January 27, 2012, 15:44 [IST]
Desktop Bottom Promotion