கர்ப்பிணிகளே என்ன சாப்பிடுறீங்க?

By Mayura Akilan

pregnancy care
கர்ப்பமாக இருக்கும் போது தாய்மார்கள் சாப்பிடும் உணவும் அவர்களின் நினைவுகளும் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணியாக இருக்கும் போது பெண்களின் மகிழ்ச்சி, துக்கம், அவர்கள் சாப்பிடும் உணவு, அவர்கள் சந்திக்கும் நபர்களின் மூலம் ஏற்படும் போன்றவை குழந்தைகளின் குணாதிசயங்களில் பிரதிபலிக்குமாம். எனவே கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்கள் தேவையற்ற வீண் கவலைகளை தவிர்த்து பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்குமாம்.

கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கர்ப்பிணிகள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

கர்ப்பிணிகள் இறுக்கமான காற்று புகாத ஆடைகளைத் தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளைக்கூட தொள தொளவென அணிவது சிறந்தது. மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது.மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும். எனவே வசதியாக ஒருக்களித்துப் படுக்கவேண்டும். கர்ப்பிணிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்.

ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே மூச்சு வாங்கும் என்றாலும், பலருக்கு கர்ப்ப காலத்தின் பின் பகுதியில் இந்தச் சிரமம் இருக்கும். இதனால் குழந்தைக்கோ, தாய்க்கோ கெடுதல் நேராது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வழக்கமான மற்றொரு பிரச்சனை நெஞ்செரிச்சல். விரிவடையும் கருப்பை வயிற்றை அழுத்துவதால் ஜீரணக்கோளாறுகள் உண்டாகும். இதனால் கருக்காலத்தின் பின்பகுதியில் நெஞ்செரிச்சல் ஏற்படும். சில பெண்களுக்கு மசக்கை காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதற்கு இயக்குநீர் மாற்றங்கள்தான் காரணமாகும். அதேபோல் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான்.

வயிற்றில் கரு வளரும் போது கருக்காலத்தின் பின்பகுதியில் வயிறு முன் தள்ளியும் அந்தக்கூடுதல் எடைகயைத் தாங்க முடியாமல் தோள்பட்டைகள் பின் தள்ளியும் இருக்கும். இந்த நிலை கர்ப்பிணிகளுக்கு முதுகு வலியை உண்டாக்கும். கர்ப்பகாலத்தில் ஹீல்ஸ் செருப்பு அணிவதால் முதுகு வலி அதிகரிக்கும்.

கர்ப்பகாலத்தில் சுரக்கும் புரொஜெஸ்டிரான் ஹார்மோனால் குடலிலுள்ள மென்மையான தசைகள் தளர்கின்றன. இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இதைத் தவிர்க்க திரவ உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது அவசியம்.

கர்ப்பகாலத்தில் மயக்கம், படபடப்பு ஏற்படுவது சகஜம். அவர்களின் உடலில் ஏற்படும் இரத்த ஓட்ட வேறுபாடுதான் இதற்குக்காரணம்.

பணியிலிருக்கும் கர்ப்பிணிகள் கடுமையான உடல் உழைப்பு இல்லாத பட்சத்தில் கர்ப்ப காலம் முழுவதும் கூட பணிபுரியலாம்.

கர்ப்பகாலத்தில் அதிக சூடான உணவுகளை உண்ணக் கூடாது. உடம்பில் எங்கும் அடிபடக்கூடாதாம், சின்னதாய் சுளுக்கு கூட ஏற்படக்கூடாதாம். பயம் உண்டாகக் கூடிய இடங்களைப் பார்க்கக் கூடாது.மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய பயணங்களை மேற்கொள்ளக்கூடாதாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடற்பயிற்சிப்பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை.கடினமான உடற்பயிற்சிகளை பண்ணக் கூடாது.நடை பயிற்சி மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Story first published: Thursday, July 19, 2012, 15:42 [IST]
Desktop Bottom Promotion