பல் ஈறுநோய் இருந்தால் குறைப்பிரசவமாகுமாம் ! ஆய்வில் தகவல்

By Mayura Akilan

Dental Issues In Pregnant Women Put Babies At Risk
கர்ப்பிணிகளின் பற்களில் பாதிப்பு இருந்தாலோ, ஈறுகளில் வியாதி ஏற்பட்டாலோ அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பற்களை கவனிக்காவிட்டால் எடைகுறைவான குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தங்களின் ஆரோக்கியத்தின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் ஆரோக்கியமான சந்ததியை இந்த உலகத்திற்கு அளிக்க முடியும். நீரிழிவு, உயர்ரத்தஅழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதைப்போல பற்களின் மீதும் கர்பிணிகள் கவனம் என்று அறிவுறுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.

ஏனெனில் குணப்படுத்த முடியாத ஈறு வியாதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப்பிரசவமும், எடை குறைவான குழந்தைகள் பிறக்கவும் ஏழு மடங்கு அதிக வாய்ப்புகள் உருவாவதாக அந்த அமைப்பின் ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது. இந்த ஈறு வியாதி, கர்ப்பிணிகளின் உடலில் சில உயிர்ம திரவங்களின் அளவை அதிகரிப்பதுதான், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணம். 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீரியோடண்டாலஜி (American Academy of Periodontology) என்கிற ஈறு நோய்கள் மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய எச்சரிக்கையை எழுப்பி வருகிறது!

ஈறு வியாதியை உண்டாக்கும் 'போர்ஃபிரோ மோனஸ் ஜிஞ்ஜிவாலிஸ்' (Porphyromonas Gingivalis) என்ற பாக்டீரியா, கர்ப்பிணியின் வயிற்றில் பனிக்குட நீரில் இருப்பது, 2007-ம் ஆண்டு மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் கர்ப்பிணிகளுக்கான ஈறு சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை, மேலைநாடுகள் துரிதப்படுத்தின. ஆனால், அடிப்படை சுகாதாரத்துக்கே அல்லாடும் நம் நாட்டில் ஈறு பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வோ, அக்கறையோ இன்னமும் ஏற்படவில்லை.

வாய்க்குழி சுகாதாரம் என்பதில் பல், ஈறு, நாக்கு போன்றவற்றின் சுகாதாரமும் உள்ளடங்கி இருக்கிறது. பெரும்பாலானோர் பல் தேய்ப்பதையே கடமையாக நினைக்கிறார்கள். 'சாதாரண ஈறு பாதிப்புத்தானே' என அசமந்தமாக இருந்துவிடுவதால் குறைப்பிரசவம் நிகழவும், எடை குறைவாக குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இதனால் குழந்தைக்கு பிறவிக் கோளாறுகள்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஈறு பாதிப்பால் உருவாகும் பாக்டீரியா, 'எக்லாம்சியா' (Eclampsia) என்கிற வலிப்பு நோயையும் உருவாக்கக்கூடியது. ஈறு கோளாறு உள்ளவர்களின் ரத்தத்தில் 'சி ரியாக்டிவ் புரோட்டீன்' (C-Reactive Protein) என்கிற கெடுதலை உண்டு பண்ணும் புரோட்டீனின் அளவு, 65 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள். கர்ப்பக் காலத்தின்போது பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோயை அதிகமாக தூண்டிவிடுவதோடு, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியையும் இந்த ஈறு கோளாறின் கூறுகள் கடினமாக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது!' என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதையெல்லாம் கேட்டு யாரும் பயப்படத்தேவையில்லை. வாய் மற்றும் பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டாலே போதும் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறும் மருத்துவர்கள் அதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர். சாப்பிடும்போது, பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையிலான 'கேப்'பில் உணவுப் பொருட்கள் சிக்கிக்கொள்ளும். பல் துலக்கும்போது அவை சரியாக அகப்படாது. இதனால், ஈறில் கிருமிகள் உருவாகி சீழ் ஏற்படும். மேலும் ஞானப்பல் முளைக்கும் தருணத்தில், கர்ப்பம் தரிக்க நேரிட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இரவில் வாய்மூடி தூங்கும்போது வாய்க்குழியில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்துவிடும். அந்த இடத்தில் அனரோபிக் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். பல் மற்றும் ஈறு இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகளில் செயல்படும் இந்த வகை பாக்டீரியாவினால், ஈறுகள் சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். ஒவ்வொரு முறை திடமான மற்றும் திரவமான உணவுகளை சாப்பிட்டவுடன், வாய்க் கொப்பளிப்பது அவசியம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல், ஈறு, வாய் இவற்றை பரிசோதித்துக் கொள்வது அவசியம். கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சொத்தைப்பல் எடுப்பது கூடவே கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பல் மற்றும் ஈறு சிகிச்சைக்காகத் தரப்படும் சில வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிகவும் வீரியமானவை. மாத்திரை, மருந்துகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு, தாயாகப் போகும் பெண்கள், குடும்ப வாரிசுக்காகத் திட்டமிடும்போதே குழந்தைக்கான இடைவெளி, உடல் ஆரோக்கியம், குடும்பப் பொருளாதாரம் போன்ற அம்சங்களுடன் முன்னெச்சரிக்கையுடன் பல் சொத்தை பிரச்னையையும் பரிசோதித்துக் கொள்வது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Monday, June 11, 2012, 11:49 [IST]
Desktop Bottom Promotion